பேரிடருக்கு மத்தியிலும் பொதுமக்களை தாக்கும் மியன்மார் இராணுவம்..!
மியன்மாரில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மியன்மாரின் இராணுவ ஆட்சிக்குழு போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 1,600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மியன்மாரின் இராணுவத்தின் இந்தத் தாக்குதல்களை முற்றிலும் மூர்க்கத்தனமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஐக்கிய நாடுகள் சபை விபரித்துள்ளது.
அதேவேளை, மியன்மாரின் பழமையான இனப் படைகளில் ஒன்றான கரேன் தேசிய ஒன்றியம், நிலநடுக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இராணுவ ஆட்சிக் குழு பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளது.
வான் வழி தாக்குதல் ...
இவ்வாறான நிலைமைகளில் இராணுவம் நிவாரண முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு மாறாக அதன் மக்களைத் தாக்க படைகளை அனுப்புவதில் கவனம் செலுத்துவதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2021 - ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு மியன்மார் பல ஆயுதமேந்திய எதிர்க்கட்சி குழுக்களுடன் உள்நாட்டுப் போரில் சிக்கியது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திடமிருந்து இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்திற்குப் பிறகு, கரேன் மாகாணத்தில் இராணுவ போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது கொடூரத்தின் உச்சம் என்றே சமூக ஆர்வலர் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இராணுவ கட்டுப்பாடு
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்பகுதி இராணுவப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலேயே இருந்தது. ஆனால் பேரழிவு பரவலாக ஏற்பட்டுள்ளதுடன் ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கங்களால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளையும் நிலநடுக்கம் பாதித்தது.
இதற்கிடையில், 2021ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட அரசாங்கத்தின் எஞ்சியவர்களை உள்ளடக்கிய எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் கட்டளையின் கீழ் உள்ள இராணுவ ஆட்சிக்கு எதிரான போராளிகள் குழுக்கள் அனைத்தும் இராணுவ ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
