ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென பழிவாங்கப்பட்ட ஊழியர்கள்? மாநகர முதல்வரிடம் முறைப்பாடு
மட்டக்களப்பு மாநகரசபையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை என்பதற்காக தம்மை பழிவாங்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதாக மாநகரசபையின் ஊழியர்கள் மாநகரசபையின் முதல்வரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபையில் நேற்று வாயில் கதவினை மூடி சிலர் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதற்காக சுகாதார ஊழியர்கள் சிலரை மாநகர ஆணையாளர் அச்சுறுத்தியதாகவும், வேலை வழங்க முடியாதென விரட்டியதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்போது குறித்த ஊழியர்களுடன் மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளதுடன், இதன்போது வேலைத்தளத்திற்கு பொறுப்பாகவிருந்தவரும் அழைக்கப்பட்டு மாநகர முதல்வரினால் எச்சரிக்கப்பட்டதுடன்,ஊழியர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாநகரசபையின் ஆணையாளரினால் எழுத்துமூலமான அறிவுறுத்தல்கள் கிடைக்காமல் எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டாம் எனவும், இதன்போது ஊழியர் பொறுப்பு மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஊழியர்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கி தமது பணிகளை முன்னெடுக்குமாறும் முதல்வர் பணிப்புரை விடுத்ததினை தொடர்ந்து ஊழியர்கள் மீண்டும் கடமைக்கு சென்றுள்ளனர்.