முள்ளிவாய்க்கால் வாரத்தின் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பம் : யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, நாளைய தினம் (09.05.2023) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை குறித்த ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் (08.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்ட பாரிய இன அழிப்பு
மேலும் தெரிவிக்கையில், தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இன அழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்குக் கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளோம்.
சிங்கள பேரினவாதத்தின் இனவழிப்பு 2009இல் உச்சத்தைத் தொட்ட போது முழு உலகமும் சிங்கள வல்லாதிக்கத்துடன் கைகோர்த்து எமது இனம் கொத்து கொத்தாகக் கொன்று குவிக்கப்படுவதினை வேடிக்கை பார்த்தன.
1948ஆம் ஆண்டு முதல் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 1958, 1976, 1983ஆம் ஆண்டுகளில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழினம், ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்ட பின் தினம் தினம் திட்டமிட்ட பாரிய இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பட்டினி சாவினை எதிர்கொள்ளக் கூடாது
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு எங்கும் தமிழர் என்ற இன அடையாளத்துக்காகவே சிங்கள இராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்டனர். நவாலி தேவாலயம், செஞ்சோலை என இன அழிப்பின் கரங்கள் நீண்டன.
2001ஆம் ஆண்டு ஆரம்பித்த சமாதான பேச்சுவார்த்தையின் பின், 2006ஆம் ஆண்டு எட்டாம் மாதம் தமிழினத்தை அழித்தொழிப்பதற்காக சிங்கள பேரினவாதத்தால் ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தில் சர்வதேசத்தில் தடை செய்யப்பட்ட கொத்தணி குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் மட்டுமன்றி உணவுத்தடை, மருந்துத்தடை கூட ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.
விடுதலைக்காக உயிரினை துச்சமாக மதித்து களத்தில் நின்ற எமது மக்கள் பட்டினி சாவினை எதிர்கொள்ளக் கூடாது என்று தமிழர் புணர்வாழ்வு கழகமும், விடுதலை சார்ந்த அமைப்பும் தம்மிடம் இருந்த அரிசியினை பங்கிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியாக காய்ச்சி, அதை மக்களுக்கு வழங்கி, மக்களினை பட்டினி சாவிலிருந்து காத்தனர்.
எமது உரிமை
எறிகணைகளும் கொத்து குண்டுகளும் எமது மக்களைக் கொத்து கொத்தாகக் கொன்ற போதும் பட்டினியால் மக்கள் இறக்கவில்லை.
இந்த உயிர் காத்த கஞ்சியினையே இன்று நாம் எமது உரிமை போராட்டத்தின் ஓர் வடிவமாக, எமது மக்களின் மீதான இன அழிப்பின் சர்வதேச நீதி தேடலின் ஓர் கருவியாக எமது இளம் சமுதாயத்திற்குக் கடத்த வேண்டிய ஒரு கட்டுப்பாட்டில் நாம் அனைவரும் உள்ளோம்.
நாம் எமது இனவிடுதலையை அடையும் வரை இக்குறியீடு கடத்தப்படும் என உறுதியெடுக்கின்றோம்.
தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அரசியல் கட்சிகள்
நாம் முன்னெடுக்கும் இச்செயல்பாட்டில் அனைத்து தமிழ் மக்களும் எல்லா வேறுபாடுகளையும் துறந்து தமிழினமாக எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டு கொள்கின்றோம்.
உங்களின் மாவட்டத்திற்கு வரும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கஞ்சிக்கு உரிய அரிசி மற்றும் இதர பொருட்களை வழங்கி விடுதலைக்கான பயணத்தில் பங்கெடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
அத்துடன் தமிழர் தாயகம் எங்கும் இயங்கும் சமூக
கட்டமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள், பாடசாலைகள்,
கல்லூரிகள், ஆலய நிர்வாகங்கள், சமூக இயக்கங்கள், தமிழ்த் தேசியத்தை நேசிக்கும்
அரசியல் கட்சிகள், தனி நபர்களாகவும் கூட்டாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை
உங்களைச் சூழ உள்ளவர்களுக்கு, குறிப்பாக இளையவர்களுக்குப் பரிமாறி வரலாற்றையும்
எங்கள் இனத்தின் வலிகளையும் தொடராக உலகெங்கும் உள்ள அனைவருக்கும் கடத்துமாறு
வேண்டி நிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.