நவீன கலிங்கத்தின் சாட்சியாக முள்ளிவாய்கால்...!
ஒட்டுமொத்தத்தில் மானிடத்தை நேசிக்கும் எந்தவொரு மனிதனாலும் இலகுவில் மறந்து விட முடியாத மண்ணே முள்ளிவாய்கால். இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாகிய தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
30 வருட அகிம்சைப் போராட்டத்தில் தமிழ் தேசிய இனத்தின் மிதவாத தலைவர்கள் ஈடுபட்ட போது தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிரதான அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனம் உரிமைக்காக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
30 வருடமாக தமது உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய தமிழ் தேசிய இனம் பிராந்திய நாடுகளே அச்சம் கொள்ளும் வகையில் வலுவான இராணுவ படைக் கட்மைப்பை கொண்டதாக வளர்ச்சியடைந்தது.
முள்ளிவாய்கால் மண்
இந்நிலையில் சர்வதேச நாடுகளின் துணையுடன் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அப்போதைய அரசாங்கம் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி போர்குற்றங்களுடனும், மனிதவுரிமை மீறல்களுடன் தமிழினத்திற்கு ஏதிராக போர் தொடுத்து முள்ளிவாய்கால் மண்ணில் 2009 மே 18 ஆம் திகதி பாரிய மனிதப்பேரவலத்துடன் போரை முடித்தது.
இதனால் இந்த முள்ளிவாய்கால் மண் என்பது எல்லோராலும் இலகுவில் மறந்து விடமுடியாத வரலாற்று மண்.இன்று தமிழ் மக்கள் தொடர்பில் ஐ.நாவை பேச வைத்த மண்ணும் இது தான்.

வன்னியின் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் இராணுவத்தின் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களுக்கும், விமான தாக்குதல்களுக்குள்ளும், துப்பாக்கி சூட்டுக்களுக்குள்ளும் தம்மை பாதுகாத்துக் கொள்ள இறுதியாக அடைக்கலம் தேடிய முள்ளிவாய்கால் மண்ணில் கூட பலர் ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர்.
அந்த மண்ணே குருதியால் தோய்ந்தது. அந்த வடுக்களை யாராலும் எப்பொழுதும் மறைக்கவும் முடியாது.
30 வருட ஆயுத வழியிலான உரிமைப் போராட்டத்தை நிர்மூலமாக்கி தமிழ் மக்களின் மண்ணில் பாரிய இனப்படுகொலை நடந்தேறிய நாள்.
இன்று அந்த இனப்படுகொலை நடந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், போரின் அவலத்தையும், அந்த நேரத்தில் மக்களின் துயரங்களையும், பரபரப்பையும் சுமந்து நவீன கலிங்கமாக இன்னமும் காட்சியளிக்கிறது முள்ளிவாய்கால் மண்.
இறுதி யுத்தம் நடந்த பகுதியே கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்கால். இங்கு தான் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக மரணித்து அந்த மண்ணுக்கு உரமாகிய இடம்.
பலர் காணாமல் போனதும், பல குடும்பங்கள் தமது உறவுகளை இழந்ததும், பலர் தமது உடல் அபயங்களை இழந்ததும், சிறுக சிறுக சேர்த்த சொத்துக்களை இழந்ததும் இந்த மண்ணில் தான்.
மர்மமாக இருக்கும் ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள்! குற்றவாளிகளாக சிறைசென்று புலனாய்வாளர்களாக வெளியில் வந்த அதிசயம்
போரின் சாட்சிகள்
இன்று 17 ஆவது ஆண்டை நோக்கி நகரும் நிலையிலும் மனிதகுலம் சந்திக்க கூடாத அனைத்து அவலங்களையும் சுமந்தவாறு அந்த மண் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
அங்கு மீள்குடியேறிய மக்களும் அமைதியாகவே அடிப்படை வசதிகளற்ற நிலையில், போரின் சாட்சிகளாக நடைபிணங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையும் சோகம் நிறைந்தது.முல்லைத்தீவு மாவட்டம் பேரழிவைச் சந்தித்து இது முதல் முறையல்ல.

அதற்கு முன்னரும் 2004 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்ததால் மிகவும் மோசமாக பாதிப்படைந்த இடங்களில் ஒன்றே முல்லைத்தீவு.
இதன்போது வெகுவாக பாதிப்படைந்த, இழப்புக்களை சந்தித்த செல்வபுரம், வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களை 2005 ஆம் ஆண்டு குடியேற்றிய இடமே முள்ளிவாய்கால் கிழக்கு பகுதி.
அவர்கள் மீள்குடியேறி தமது வாழ்வை கட்டியெழுப்ப முன்னர் மீண்டும் ஒரு இடப்பெயர்வைச் 2009 இல் சந்திக்க நேரிட்டது.
இதன்போது அவர்கள் மட்டுமல்ல, வன்னி மண்ணில் வாழ்ந்த அத்தனை மக்களும் வந்து தங்கியிருந்த இடமாகவும் இது விளங்கியது.
இன்று முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில் வட்டுவாகல் உள்ளடங்கலாக சுமார் 464 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
யுத்தம் முடிவடைந்த பின்பு இம் மக்கள் 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டனர்.
ஆனாலும் அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகளான போக்குவரத்து, வீட்டுத்திட்டம், குடிநீர் என்பன முழுமை பெறாத நிலையில் இம்மக்கள் தமது வாழ்நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மக்களின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் கடல் வளம் கூட தென்னிலங்கை கடற்றொழிலாளர்களால் அரச இயந்திரங்களின் ஆதரவுடன் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இரத்தம் தோய்ந்த ஆடைகள்
யுத்தம் நடைபெற்ற போது மக்கள் அமைத்த பதுங்குழிகள் குண்டுமழைகளால் மூடப்பட்ட நிலையிலும், அதனுள் மக்களின் உடைமைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் இன்றும் காட்சியளிக்கின்றது.
மக்களது உடைகள், அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் என பரவலாக காணப்படுவதுடன் சிறுவர்களது விளையாட்டுப் பொருட்கள் கூட சேதமடைந்த நிலையில் அந்த மண்ணில் போரின் சாட்சியாகவுள்ளது.
பரவலாக காணப்படும் காயமடைந்த மக்களுக்கு ஏற்றப்பட்ட மருந்துக் குவளைகள், மருத்துவப் பொருட்கள் என்பன அந்த மண்ணில் இடம்பெற்ற உயிரிழப்புக்களை வெளிப்படுத்துகின்றது.

விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரவைகள் வெடித்த நிலையிலும், வெடிக்காத நிலையிலும் மக்கள் குடிமனைகளை அண்டியதாக இன்றும் காணப்படுகின்றது.
இரத்தம் தோய்ந்த ஆடைகள் இனப்படுகொலைக்கான சாட்சியாக அந்த மண்ணில் உள்ளது.
அந்த பகுதியில் மூடப்பட்ட பதுங்கு குழிகளையும், மண்களையும் அகற்றுகின்ற போது எலும்புக் கூடுகளும் வெளிப்படுகின்றன. விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கடற்படைக் கலங்களை காட்சிப்படுத்தி அவர்களின் பொறியியல் திறமையை வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது இராணுவம்.
இந்த மண்ணில் காணும் மக்கள் ஒவ்வொருவரினதும் முகத்திலும், மனதிலும் கணதியையே காணமுடிகிறது. உணர்வு பூர்வமாக அனைவரும் நினைவுகூர வேண்டிய அந்த நாளுக்காக தமிழர் தேசம் தயாராகி வருகிறது.
இறுதிப் போரின் போது தமது பிள்ளைகளையும், கணவன்மாரையும் இராணுவத்திடம் ஒப்படைத்த மக்கள் இன்று அவர்களுக்கு என்ன நடந்தது என நீதிகோரி 3350 நாட்களையும் தாண்டி வீதிகளில் இருந்து போராடி வருகின்றனர்.
போர் முடிந்து 17 ஆண்டுகள்
இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி மக்கள் 17 வருடத்தை கடந்தும் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும், தமிழ் மக்களது ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் தமிழ் மக்களது பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை.
தென்னிலங்கையின் மனங்களில் மாற்றங்களை காணமுடியவில்லை. இவைகள் அனைத்தும் புதிய கலிங்கத்தை நினைவூட்டுகின்றது. வட இந்தியாவில் பாரிய சாம்ராச்சியத்தை கட்டி எழுப்பிய மௌரியப் பேரரசன் அசோகச் சக்கரவர்த்தி.
அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து இன்றைய ஒரிசாவான கலிங்கத்தை கைப்பற்ற முயன்றான். அந்தப் போர் அவன் வாழ் நாளில் மறக்க முடியாத போராக அமைந்தது.

அவ்வளவு இழப்புக்களும் சொத்தழிவுகளும் ஏற்பட்டன. அன்றைய அசோகச் சங்க்கரவர்த்தியின் மனமாற்றத்திற்கும், ஆசைகளை துறந்து பௌத்தத்தை தழுவதற்கும், அந்த பௌத்தத்தை இலங்கைக்கு பரப்புவதற்கும் காரணமாக அமைந்தது அந்தக் கலிங்கத்துப் போர்.
அந்த போரின் அழிவுகளும் இழப்புக்களுமே அசோகனை பௌத்த சமயத்தை தழுவி அந்த சமயத்தை இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பரப்புவதற்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் முள்ளிவாய்கால் அவலம் இன்றைக்கும் அந்த பௌத்தத்தை தழுவிக் கொண்டவர்களின் மனச்சாட்சியை உறுத்தவில்லை அல்லது தட்டியெழுப்பவில்லை என்பதை நினைக்கும் போது இங்குள்ள பௌத்தம் தரம் தாழ்ந்து விட்டதா என்ற கேள்வியையே தமிழ் மக்கள் மனங்களில் எழுப்பியுள்ளது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 30 April, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.