காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1604 ஆவது நாளாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களுடைய போராட்ட கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை காலமும் தமக்கு எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்றும் உடனடியாக தமக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்,சர்வதேசமே பதில் சொல் என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் பிரபாகரன் றஞ்சனா,
உறவுகளைத் தேடி போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வட்டுவாகலிலும், ஓமந்தையிலும் எங்கள் உறவுகளை இராணுவத்திடம் கையளித்தோம். எங்கள் உறவுகளை மீட்டு தர இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் களைத்த நிலையில் இன்று சர்வதேசத்திடம் கேட்டு நிற்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்தினால் ஒருபோதும் நீதி கிடைக்கப்போவதில்லை. காலம் கடத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமாகும். எங்கள் உறவுகளைத் தேடிய 90 ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இதுவரை மரணமடைந்து போனார்கள்.
பல அச்சுறுத்தலுக்கு மத்தியில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து கொண்டிருந்தாலும் எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.
குழந்தைகளையும் பாடசாலை மாணவர்களையும் கையளித்தோம். அரசாங்கம் மாறிமாறி வந்து தமிழருக்கு நீதி கிடைக்காமல் இழுத்தடிப்பு செய்கின்றார்கள். எமக்கான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.