முல்லைத்தீவு மனித புதைகுழியும் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமும்
இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் இடத்தில் எதிர்வரும் ஜுலை 6ஆம் திகதி அகழ்வுகளை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
”எலும்புத்துண்டுகள் காணப்படுகின்றன” என்று குற்றச்சம்பவம் இடம்பெற்ற பகுதியாக குறிக்கப்பட்டுள்ள இடத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 30) சென்று பார்வையிட்ட நீதவான் டி.சரவணராஜா கூறினார்.
சட்டை ஒன்றும், காற்சட்டை ஒன்றும் காணப்படுவதாக பொலிஸார் கூறியதை காணொளிகளில் கான முடிந்தது. அந்த இடத்தில் முதல் நாள் தோண்டப்படும் போது இதர ஆடைகளும் காணப்பட்டன.
கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் நீர்வழங்கலுக்கான குழாய்கள் பதிக்கப்படுவதற்காக தோண்டப்பட்ட போது உடல் எச்சங்களும், ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில் பெண்களின் ஆடைகளும் இருந்ததாக, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் அந்த இடத்தை கடந்த வியாழக்கிழமை (29.06.2023) சென்று பார்வையிட்ட பின்னர் கூறினார்.
விசேட அதிகாரிகளுக்கு உத்தரவு
அந்த இடத்தை சென்று பார்வையிட்ட நீதவான் சரவணராஜா, பொலிஸார் அந்த இடத்தை பாதுகாக உத்தரவிட்டதோடு, எதிர்வரும் வியாழக்கிழமை அகழ்வு மேற்கொள்ளப்படும் போது சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் நிபுணர்கள் மற்று வெடி குண்டை செயலிழக்கச் செய்யும் விசேட அதிகாரிகள் உட்பட பலர் வருகை தரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அந்த இடத்தில் உடல் பகுதிகள் மற்றும் உடைகள் கண்டெடுக்கப்பட்டு சரியாக ஒரு கிழமைக்கு பிறகு அகழ்வு நடைபெறவுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு கொடூரமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் ரத்தக்களறியுடன் முடிவிற்கு வந்த பிறகு, இவ்வகையில் முல்லைத்தீவில் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுவதை அடுத்து தமிழர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
நான்கு மனித உரிமை அமைப்புகள் “மனித புதைகுழிகள் மற்றும் தோல்வியடைந்த அகழ்வுகள்” என்ற தலைப்பில் இலங்கையை அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்ட நிலையில், கொக்குத்தொடுவாய்-கொள்ளிளாய் பாதையில் எதேச்சையாக இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் நாட்டின் பல பகுதிகளில் குறைந்தது 20 மனித புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதையும் அதன் விசாரணைகளை தடம்புரள அரச படைகளும் அரசும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அதுமாத்திரமன்றி எதிர்காலத்தில் அவ்வகையில் மனித புதை குழிகள் அகழப்படும் போது கையாள வேண்டிய நெறிமுறைகள் குறித்த பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தன. அந்த பரிந்துரைகளில், “இலங்கை அரசு மனித புதை குழிகளை கையாள்வது, அகழ்வது ஆகியவை தொடர்பில் குறிப்பிட்ட சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதை ஒரு பரிந்துரையாக கூறியுள்ளது.
மேலும் அப்படிச் செய்யும் போது, விசாரணைகள் முடியும் வரை அவற்றை அடையாளப்படுத்துவது, பாதுகாப்பது ஆகியவையும் செய்யப்பட வேண்டும்.
கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும்
அந்த மனித எச்சங்கள் பாதுகாக்கப்படும் போது மனித புதை குழியிலிருந்து அந்த எலும்புப் பகுதிகள் நிலம் அல்லது மண்ணிலிருந்து எடுக்கப்படும் போது மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் அதை பாதுகாக்கும் தொடர் சங்கிலி துண்டிக்கப்படாமல் நிலைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த நான்கு அமைப்புகளும் அளித்துள்ள பரிந்துரைகளில், புதை குழிகளிலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும் போது குடும்பங்களுடன் தொடர்புகளை பேணும் வகையில் ஒரு அதிகாரியும் உள்வாங்கப்பட வேண்டும் என்றும், அவர்களிடமிருந்தும் மரபணு மாதிரிகள் பெறப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எதிர்கால அகழ்வுகள் தொடர்பில், உண்மைக்கும் நீதிக்குமான சமாதான செயற்திட்டம் (ITJP), இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS), மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி மையம் (CHRD) மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் (FOD)ஆகியவை, அந்த இடங்களை ஆய்வு செய்வதற்கு தொழில்சார் சிறப்பு பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
அந்த சிறப்பு பிரிவுக்கு தடயவியல் தகமைகள் இருப்பது அவசியம் என்பதை வலியுறித்துள்ள பரிந்துரைகள், அவர்களுக்கு மரபணு பரிசோதை செய்வதற்கு உட்பட போதிய வளங்கள் அளிக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.
இவை மட்டுமின்றி சர்வதேச பங்கேற்புடன் காலதாமதம் செய்யாமல் மனித புதை குழிகள் என்று அறியப்படும் இடங்கள் அனைத்திலும் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அவற்றை பன்னாட்டு நெறிமுறைகளிற்கு அமைவாக தரவுகள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
“சுயாதீனமான நீதித்துறையை வலுப்படுத்துவது, அதன் காலவரையறையை உறுதி செய்து பேணுவது, அதிலுள்ளவர்களுக்கான பணி தொடர்பான நிபந்தனைகளை தெளிவுபடுத்துவது, நீதித்துறையில் மக்களை நிர்வகிப்பது மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விடயங்கள் அதில் பதவி உயர்வு அல்லது பதவி நீக்கம் உட்பட்டவைகளிற்கான நெறிமுறைகளை வளர்ப்பது, மற்றும் சர்வதேச குற்றங்கள் மற்றும் அதன் விசாரணைகள் குறித்து பயிற்சி அளிப்பது அவற்றை உறுதிப்படுத்துவது ஆகியவை அடங்க வேண்டும்” என அந்த நான்கு அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |