முஸ்லிம் மக்களுக்கு முபாறக் அப்துல் மஜித் விடுத்துள்ள அறிவிப்பு
முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு புதிய ஜனாதிபதி தெரிவில் முஸ்லிம் சமூகத்தின் சில உரிமைகளையாவது பெற முயற்சிக்க வேண்டுமே தவிர பணம், பதவிகளுக்காக வாக்களிக்க கூடாது என ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் கலாபூசணம் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.
கல்முனை காரியாலயத்தில் இன்று(18) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் ஆணையை பெற்றது முதல் இன்று வரை அரசுக்கும், ஜனாதிபதிகளுக்கும் ஆதரவளித்துள்ள போதும் முஸ்லிம் சமூகத்தின் எந்தவொரு உரிமையையும் முன்வைத்து ஆதரவளித்ததில்லை.
அதே போல் ஏனைய மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என்பவை கூட முஸ்லிம்களின் உரிமைகளை முன் வைக்காமல் தமக்குரிய பதவிகளை மட்டுமே முன் வைத்து ஆதரவளித்து வந்துள்ளனர்.
எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சி மட்டுமே 2005 ஜனாதிபதி தேர்தலின் போது மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை எழுத்து மூலம் முன் வைத்து அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச ஆதரித்து அதனை வென்றும் காட்டியது.
அதே போல் 2019 தேர்தலிலும் 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்தோம். ஆனாலும் முஸ்லிம் சமூகம் எமது கட்சிக்கு ஆணை தராததால் எமது கோரிக்கைகள் எதையும் கோட்டாவோ பொதுஜன பெரமுனவோ நிறைவேற்றவில்லை.
அவர்களின் இத்தகைய மனோநிலை காரணமாக இன்று கேவலமான நிலைக்கு வந்துள்ளனர். ஆகவே முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற்று நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சிகள் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் சில உரிமைகளையாவது பெற்றுத்தரும் வகையில் பேச்சுவார்த்தை செய்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முன் வரவேண்டும்
நிபந்தனைகள் நிறைவேற்றினால் வாக்களிப்பு
முக்கியமாக இனப்பிரச்சினை தீர்வில் வடக்கு - கிழக்கை இணைக்காத வகையில் முஸ்லிம்களுக்கான சம பங்கு, திகாமடுல்ல பிரதேசத்தை இரண்டாக பிரித்து கல்முனை தேர்தல் மாவட்டம், அம்பாறை தேர்தல் மாவட்டம் என இரண்டு தேர்தல் மாவட்டமாக மாற்றுதல்.
கல்முனையில் - சாய்ந்தமருதுக்கென பிரதேச சபை, பாண்டிருப்புக்கென பிரதேச சபை வழங்கல், அம்பாரை மாவட்ட கரும்புச் செய்கை காணி முதல் முஸ்லிங்கள் பறிகொடுத்த 64000 ஏக்கர் காணி வரை எமது காணிகளை மீளப்பெறல்.
கொழும்பிலும் கண்டியிலும் முஸ்லிம் பெண்களுக்கான மேலதிக அரச பாடசாலைகள், விகிதாசார தேர்தல் முறையில் மாற்றம் செய்யாமை.
தடை செய்யப்பட்ட முஸ்லிம் இயக்கங்களில் பயங்கரவாதத்தில் நேரடியாக சம்பந்தப்படாத தவ்ஹீத் ஜமாஅத்துக்கள் மீதான தடைகளை நீக்குதல், மட்டக்களப்பு பல்கலைகழகத்தை அரச பிடியிலிருந்து விடுவித்தல் போன்ற முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை எந்த ஜனாதிபதி வேட்பாளர் ஏற்கிறாரோ அவருக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் கட்சிகள் வாக்களிக்க முன் வர வேண்டும்.
அவ்வாறு செய்ய முன் வராத கட்சிகளுக்கெதிராக முஸ்லிம்கள் ஜனநாயக வழியில் நின்று மக்கள் போராட்டம் முன்னெடுக்க வேண்டும் கோட்டாவுக்கு ஆதரவு கொடுக்காத முஸ்லிம் தலைவர்கள் கோட்டா ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என சொல்லி பயமுறுத்தினார்களோ அது எதுவும் நடக்கவில்லை.
இலங்கை அடுத்த மியன்மார் ஆகும். ஏனெனில் பள்ளிவாயில் உடையும், பெண்கள் அபாயாவும் போட முடியாது, அதான் சொல்ல முடியாது, முஸ்லிம்கள் அமைச்சர் ஆக முடியாது, வெள்ளை வேன் கலாச்சாரம் வரும் என்றெல்லாம் சொன்னார்கள். இது எதுவும் நடக்கவில்லை. கொரோனா காரணமாக சடலங்களை எரித்தனர். இதுதான் கோட்டா அரசு செய்த மிகப்பெரிய பிழை.
சமூக சேவை செய்த தவ்ஹீத் ஜமா அத்துக்களை ஞானசரவின் பேச்சை கேட்டு தடை செய்தமை மற்றும் தனிப்பட்ட வகையில் தனக்கு உதவிய கட்சியினரை கோட்டா கவனிக்கவில்லை என்ற பிழையும் நடந்தது. தன்னை பதவிக்கு கொண்டு வந்த மகிந்தவை மற்றும் அரசியல் கட்சிகளை ஓரம் கட்டினார்.
அரசியல்வாதிகளை ஒதுக்கி இராணுவத்துக்கு முதலிடம் கொடுத்தார். இவைகள்தான் நடந்தன. இவை நடக்கும் என யாரும் எதிர் பார்க்கவில்லை.
ஆனாலும் ஆட்சியில் உள்ள விமல், உதய கம்மன்பில, சரத் வீரசேகர போன்ற அமைச்சர்கள், அரச ஆதரவு தேரர்கள், எடுத்ததற்கெல்லாம் முஸ்லிம், முஸ்லிம் என சொல்லி மக்களை தவறான பாதையில் இட்டு செல்லும் தவறுகளை நிறுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் படி நாம் கட்சி ரீதியில் ஊடக மாநாடு நடாத்தி கூறினோம்.
இறைவனுக்கு பிடிக்காத கோட்டாவின் ஆட்சி
நல்லாட்சி போன்று கோட்டா அரசும் ஆட்சி செய்ய வேண்டாம் என பல முறை உபதேசம் செய்தோம். இறுதியில் யாரும் எதிர்பாராத பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடுதான் ஏற்பட்டது.
இறைவனுக்கு பிடிக்காத ஆட்சி முறையினால் இவை ஏற்பட்டது. இதுவே கோட்டாவை நாட்டைவிட்டு வெளியேற்றியது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



