கோரிக்கைகள் புறக்கணிப்பா..! அரசாங்கத்தின் அசமந்தப்போக்கு குறித்து சிறிநாத் எம்.பி ஆதங்கம்
தமிழ் மக்களின் உரிமை, அரசியல், சுதந்திரம் ஆகிய விடயங்களில் தற்போதுள்ள அரசாங்கம் மந்தக் கதியில் தான் செயல்படுகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதியிடம் அழுத்தமான கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
காக்காச்சுவட்டைப் பிரதேசத்தில் நேற்று(17.01.2026) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் நடந்த ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியிடம் வலியுறுத்து
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் கட்சி சார்பாக சந்தித்த வேளையிலும் இந்த விடயங்கள் தொடர்பில் முயற்சிகளை எடுக்குமாறும் நாம் ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.
முதல் தடவையாக ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்த விடயம், “ நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. இவை தொடர்பில் இரண்டு வருடங்கள் கழித்த பின்னர் தங்களுடைய வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்” தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது ஒரு வருடம் கடந்து விட்டது. அதற்கு அப்பால் மாகாண சபையை நடைமுறைப்படுத்துவதிலும் பாரிய இழுத்தடிப்புகள் அல்லது பாரிய தயக்கங்கள் காணப்படுகின்றன.
தமிழ் மக்களுக்குரிய போதிய அதிகாரம் இல்லாமல் இருந்த போதும் கிடைத்த மாகாணசபை முறைமையைக் கூட வடகிழக்கு பகுதியில் நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளை இயங்க விடுவதில் கூட இந்த அரசு மெத்தனப் போக்கை காட்டுகிறது.
எனினும், இவை தொடர்பில் நாம் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயையும் ஜனாதிபதியிடம் எமது கருத்துக்களை நாம் வலியுறுத்திக் கொண்டு வருகின்றோம்.
தொற்றுநோய்களின் தாக்கம் அதிகரிப்பு
உலகளாவிய ரீதியில் தொற்றுநோய்கள் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.
மக்கள் சமகால சூழ்நிலைக்கு இயல்பாக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால். இது பாரியளவில் அதிகரிக்கின்றன. போதிய உடற்பயிற்சியின்மை, உணவுப் பழக்க வழங்களில் மாற்றம், உடனடி உணவுகளை உண்ணுதல், மதுபாவணை, புகையிலை பாவணை, போன்ற பழக்கங்களினால் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளன.

இது தொடர்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மூலமாக வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கு பகுதியில் உள்ள சுகாதார பிரச்சனைகள் தொடர்பில் நாங்கள் அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றோம்.
சுகாதாரத் துறைக்கு பாரியளவான நிதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. இதுவொரு சிறந்த விடயமாக பார்க்கப்படுகிறது. கடந்த காலத்தில் இராணுவ கட்டுப்பாடற்ற பிரதேசங்களாக இருந்த பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு விசேட திட்டங்ககள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
வைத்திய சேவை
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பிரதேசத்தில் பெரியளவில் வைத்தியசாலைகள் இல்லை.
நகர்புறங்களில் நான்கு ஆதார வைத்தியசாலைகளும், ஒரு போதனா வைத்தியசாலையும் காணப்படுகின்றன. ஆனால் மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியிலே வெள்ள அனர்த்த காலங்களில் பாதைகள் துண்டிக்கப்படுகின்ற பொழுது நோயாளர்கள் தங்கி இருந்து சேவை செய்யக்கூடிய அளவிற்கு ஆதார வைத்தியசாலைகள் எதுவுமில்லை.
இந்த விடயங்களை மாவட்ட சுகாதார அமைப்புக்கள் ஊடாக பிராந்திய சுகாதார சேவைகளுக்கு பல விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன், ஆரம்ப சுகாதார வைத்திய பிரிவுகள் அமைப்பதற்காகவும் பல வைத்தியசாலைகள் தரம் உயர்த்துவதற்காகவும் பல விண்ணப்பங்கள் கடந்த காலங்களில் அனுப்பப்பட்டிருக்கின்றன.
சிறிய சிறிய செயற்றிட்டங்கள் மூலம் பல வைத்தியசாலைகள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், மக்களின் தேவைகளை கருதி அவற்றுக்கு ஏற்ற வகையில் சுகாதார வசதிகளை கருதிக் கொண்டு செய்ய வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
இது சம்பந்தமாக பாரிய அழுத்தங்களையும் விண்ணப்பங்களையும் நாம் தொடர்ச்சியாக அமைச்சரவைக்கும் அரசுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.