பொன்பரப்பி மலை பகுதியில் புத்தர் சிலை வைக்க முயற்சி! இம்ரான் மகரூப் ஆவேசம்
திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள, அரிசி மலை பொன்பரப்பி மலை எனும் பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வைக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் அதை தடுப்பதற்கு பொது மக்கள் முனைந்த போது அங்கு முறுகல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிலை வைப்பதை தடுக்க முற்பட்ட பொதுமக்களுக்கு பிஸ்டலை காண்பித்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், தொல்பொருள் திணைக்களத்தின் விசேட வர்த்தமானி அறிவித்தல்கள், மக்களின் பாரம்பரிய வசிப்பிடம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படாமலே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தொல் பொருள் திணைக்களத்தின் விசேட வர்த்தமானி அறிவித்தல்
குறித்த தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளோடு பெளத்த பிக்குகளும் செல்கிறார்கள். அதிகாரிகள் பார்க்கின்ற வேலைகளோடு இவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது என வினவியுள்ளார்.
இந்த சிலை வைப்பு விவகாரம் தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் நேரடியாக பல கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இதற்கு அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பதிலளிக்கையில், இது சம்பந்தமாக தனக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும், இது தொடர்பில்
ஆராய்ந்து விளக்கத்தை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
