முல்லைத்தீவில் காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் (Photo)
முல்லைத்தீவு மாவட்டதில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று (03.10.2022) இடம்பெற்றுள்ளது.
உணவகம் ஒன்றிலிருந்து ஏ9 வீதியை கடந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன், அதே திசையில் நேராக பயணித்த கார் மோதியுள்ளது.
விபத்தின்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே காயங்களிற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பவத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியன பலத்த சேதங்களிற்குள்ளாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி தர்மபுரம்
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
விபத்து கடத்த 1ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில் நேற்று (02.10.2022) உயிரிழந்துள்ளார்.
கல்லாறு பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் பவிராஜ் என்ற 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சுண்டிக்குளம் கல்லாறு பகுதியை சேர்ந்த குறித்த நபர், புளியம்போக்கணை பகுதியில் தனது உறவினர் வீட்டுக்கு சென்று மூன்று பேருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன் போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் புளியம்பொக்கணை பகுதியில் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மூவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.