தெல்லிப்பழை பொலிஸாருக்கு தாயொருவர் விடுத்துள்ள பகிரங்க சவால்!
தனது மகனை தெல்லிப்பழை பொலிஸார் அவமானப்படுத்தியதாக தாயாரொருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்தோடு, தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவிப்பது இல்லை என்றால் மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு தாயொருவர் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் இளைஞனின் தாய் கருத்து தெரிவிக்கையில், எனது மகன் நேற்று (16) வேலைக்கு சென்றார்.
மருத்துவ பரிசோதனை
இதன்போது தெல்லிப்பழை பொலிஸார் அவரை மறித்து , கஞ்சா பாவித்துள்ளதாக கூறி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அதன்பின்னர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இந்நிலையில் எனது மகன் எந்தவிதமான போதைப்பொருளும் பயன்படுத்தவில்லை என மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் அவரை வைத்தியசாலையை விட்டு வெளியே அழைத்துவரும்போது "நீ சாராயம் குடித்திருக்கிறாய்" என மிரட்டினார்களாம். மருத்துவ பரிசோதனையை மீறி மிரட்டுவதற்கு காரணம் என்ன.
நான் கடன்பட்டு வீடு கட்டினேன். அந்த கடனை அடைப்பதற்காக 19 வயதிலேயே எனது மகன் ஒவ்வொரு நாளும் தவறாது வேலைக்கு செல்கின்றார். இவ்வாறு வேலைக்கு செல்லும்போது அவருக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
பகிரங்க சவால்
பொலிஸார் வீதியில் நின்றும் இலஞ்சம் வாங்கி உழைப்பார்கள். அத்துடன் மாத சம்பளமும் வரும். ஆனால் எனது மகன் வேலைக்கு சென்றால் தான் எமக்கு சம்பளம் கிடைக்கும். கஞ்சா பாவித்ததாக கூறி அவமானப்படுத்தியுள்ளனர்.

நான் தெல்லிப்பழை பொலிஸாரிடம் பகிரங்க சவால் ஒன்று விடுக்கிறேன். உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் வைத்தியசாலைக்கு வாருங்கள். நீங்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றீர்களா இல்லையா என முதலில் உங்களை பரிசோதனை செய்வோம்.
உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த சவாலுக்கு வாருங்கள். அதன்பின்னர் எங்களது பிள்ளைகளை பரிசோதனை செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.