வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தாயார் ஒருவர் மரணம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து தனது மகனைத் தேடி வந்த தாயார் ஒருவர் நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
கைவேலி - புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரான சுந்தரலிங்கம் கனகமணி என்பவரே சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான சுந்தரலிங்கம் சுரேஷ்குமார் கடந்த 2009ஆம் ஆண்டு அரசால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டார்.
இன்றுவரை அந்த செல்வ மகனை அன்பு தாயாரால் காணமுடியாத நிலையில் இவ்வாறு மரணமடைந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குச் சர்வதேச நீதி வேண்டிக் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை வட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தாயாரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
நீதியை வேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல நூற்றுக்கணக்கான தாய்மார்கள், தந்தையர்கள் மரணமடைந்துள்ள நிலையில் குறித்த தாயாரும் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
எனினும் இவரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்புக்கும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



