எமது வாழ்வாதார அழிவிற்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை: பிரதேசவாசிகள் கவலை தெரிவிப்பு
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் இதுவரை சுமார் 650இற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கையில்,
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
குறித்த கிராமத்தில் வாழும் பெருமளவான குடும்பங்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்வதுடன், பெருமளவான விவசாய பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாளாந்தம் தொடர்ந்தும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் இரவு தென்னந்தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் 35க்கும் மேற்பட்ட தென்னைகளை நாசம் செய்துள்ளன.
இதேபோன்று நாளாந்தம் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில காலங்களுக்குள் 650க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் இந்த காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்ற நிலையில், காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை காட்டு யானைகளால் ஏற்படுகின்ற
அழிவுகளுக்கு எந்தவிதமான நஷ்டஈடுகளும் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.








