கிராமங்களில் குரங்குகளின் அட்டகாசம்:வீடுகளில் புகுந்து உணவை எடுத்துச் செல்லும் குரங்குகள்
நுவரெலியா மாவட்டம் அம்பகமுவை பிரதேச செயலாளர் சில கிராமங்களில் வீடுகளுக்கு புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்வதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது.
பேரகாமுல்ல, தாகம்பிட்டிய, பதுளுபொல, பேரகொல்ல, எபர்டின், ஹெப்பேகந்த, அர்சசேலன போன்ற கிராமங்களில் சுற்றித்திரியும் குரங்கு கூட்டங்கள், கிராமங்களில் உள்ள வீட்டுத்தோட்டங்கள் மாத்திரமின்றி வீடுகளில் உள்ளவற்றையும் அழித்து வருகின்றன.
கூட்டம் கூட்டமாக கிராமங்களுக்குள் வரும் குரங்குகள்
இதனால், கிராமங்களில் வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கூட்டம் கூட்டமாக கிராமங்களுக்குள் வரும் குரங்குகள் வீட்டுத் தோட்டங்களில் உள்ள பயிர்களை அழித்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளுக்கு புகும் குரங்குகள் ஜன்னல் திரைச்சீலைகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருவதுடன் வீடுகளின் சமையலறைகளுக்கு புகுந்து சமைத்து வைக்கப்பட்டுள்ள சோறு உட்பட உணவுகளை சட்டி, முட்டி பாணைகளுடன் எடுத்துச் செல்வதாக கிராமவாசிகள் கூறுகின்றனர்.
குரங்குகளை அப்புறப்படுத்துமாறு கோரும் மக்கள்
இந்த நிலைமை காரணமாக வீடுகளில் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்க முடியாத நிலைமையேற்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தி குரங்குகளை கிராமங்களில் இருந்து அப்புறப்படுத்தினால், பெரும் உதவியாக இருக்கும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.