சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களித்து எமது பலத்தை நிரூபிப்போம்: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம்
தமிழ் தேசமாக தேசிய இனத்தின் தொடர்ச்சியாக சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களித்து எமது பலத்தை நிரூபிப்போம் என வடகிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழின படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி நிற்கின்ற தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையிணை வரவேற்பதோடு அடம்பன் கொடியும் திரண்டால் முடுக்கு அதுபோல் நாமும் இணைந்தால் பலமே என்பதற்கு அமைய வேண்டும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் வடகிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய இனத்தின் தொடர்ச்சி
“தேசமாக தேசிய இனத்தின் தொடர்ச்சியாக தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்குமாறு எமது உறவுகளை கோறுகின்றோம். தமிழ் தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களாக விடுதலைக்காக பல்வேறு வழிமுறைகளில் போராடி வருகிறது தமிழ் மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மை மிக்க ஒரு இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவ தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள் உள்ளது என்பதையும் சிங்கள பேரினவாத அரசால் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.
சிங்கள அரசியல் தலைமைகளிடம் இருந்து நீதி கிடைக்கப் போவதில்லை என்பதையும் நாம் தெளிவாக புரிந்து எமது மக்களின் அரசியல் அபிலாசைகளான தமிழ் தேசியம், சுய நிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைந்த மரபு வழித்தாயகம் என்பதை நிலைநிறுத்தி எமது உரிமையை நாமே போராடி பெற வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.
அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சிங்கள பேரினவாத அரசிடம் இல்லை என்ற காரணத்தினால் நாம் சர்வதேசத்திடம் நமக்கான நீதியை கோரி தொடர்ந்து போராடி வருகின்றோம்.
வேறு தமிழ் தேசிய கட்சிகளும், தமிழர் தாயகத்தை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்கள், கருத்து உருவாக்கிகள், புத்திஜீவிகள், குடிசார் அமைப்புகள், கிராமமட்ட அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்து உருவாக்கிய மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு தமிழ் தேசிய பொது கட்டமைப்பாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |