வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களை ஒடுக்க முயலும் அநுர அரசாங்கம்..!
புதிய அரசாங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை அலுவலகத்திற்குள் திட்டமிட்டு புகுத்தி, போராட்டத்தினை இல்லாமல் செய்யும் முயற்சியை புதிய அரசு முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அமலநாயகி அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட அவர், "எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கேட்கவேண்டிய கால சூழ்நிலையிலிருக்கின்றோம்.
தற்போதுள்ள ஆட்சிமாற்றத்திலும் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம். புதிய ஆட்சிவந்ததும் ஏதோ புதிய ஆட்சிவந்துள்ளது எங்களுக்கு அனைத்தும் கிடைத்துவிட்டது என்று நீங்கள் ஒருபோதும் கனவு காண வேண்டாம்.
தேர்தல் திட்டங்கள்..
கடந்தகால ஆட்சியாளர்கள் எங்களை ஏமாற்றி எவ்வாறு எமது இனத்தினை அழித்தார்களோ அதனை விட படுமோசமான அரசியல் வியூகத்திற்குள்ளேயே நாங்கள் தற்போது நின்று கொண்டிருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயப்பரப்பிற்குள் பல விடயங்களை செய்யப்போகின்றோம், உண்மையினை கண்டறியப் போகின்றோம் நியாயங்களை சொல்வோம் என்று கூறி ஆட்சிக்குவந்தவர்கள் மூன்று தேர்தல்களை நடாத்தியது மட்டுமே வேலைத்திட்டமாக இருந்ததே தவிர காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்திற்குள் திட்டமிட்டு புகுத்தி தமது போராட்டத்தினை இல்லாமல் செய்யும் முயற்சியை திட்டமிட்டு முன்னெடுத்துவருகின்றது.
நாங்கள் கேட்டுக்கொண்டிருப்பது உள்ளகப்பொறிமுறை அல்ல. சர்வதேச நீதிப் பொறிமுறையினையே நாங்கள் கேட்டுநிற்கின்றோம். எங்களது போராட்டங்களின் வடிவங்களே இன்று சர்வதேச அழுத்தம் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்படுகின்றது.
கோரிக்கைகள்
அதன் காரணமாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தினை ஒரு மாயையாக காட்டி எமது போராட்டத்தினையையும் கோரிக்கையினையும் முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் தங்களை நல்லரசாக காட்ட சிங்கள அரசு முயற்சிக்கின்றது.
இது தொடர்பில் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இன்று பல்வேறுபட்டவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்திற்குள் வந்து அதற்குள் பிளவுகளை ஏற்படுத்தி அதனை தங்களுக்கு சார்பாக கையாண்டு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி மன ரீதியான தாக்கங்களை ஏற்படுத்துவதுடன் உணர்வுகளை மழுங்கடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்கம் மற்றும் அதன் புலனாய்வு கட்டமைப்புகள் சூழுச்சிகளை முன்னெடுத்துள்ள அதேநேரத்தில் எங்களுடன் அதிகளவின் பயணிக்கின்றவர்களும் இதனை பிளவுபடுத்தும் முயற்சியில் செயற்படுகின்றனர்.
நாங்கள் இன்று வீதியில் நின்று போராடுவது எங்களது சந்ததிகளுக்காக. எங்களுக்கு நடந்த இந்த அநியாயம், அட்டூழியங்கள் எதிர்கால சமூகத்திற்கு வரக்கூடாது என்பதற்காகவே நாங்கள் போராடிவருகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


