சிறுபான்மையினர் பட்ஜெட்டில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் - அப்துல்லா மஹ்ரூப்
சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிட்டில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் (Abdullah Mahroob) கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2022 வரவு செலவுத் திட்டம் என்பது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் (Basil Rajapaksa) முதலாவது வரவு செலவுத் திட்டம். நிதி அமைச்சர் என்ற வகையில் பசில் ராஜபக்ஷ பற்றி நாட்டில் ஒரு நல்ல நம்பிக்கை இருக்கின்றது.
அந்த நம்பிக்கை பாதிக்கப்படாத வகையில் வருகின்ற ஒரு மாதத்தில் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி வரை அந்த பாதிட்டில் என்ன இருக்கின்றது என்பதைப் பற்றித் தெளிவாகக் கூறுகின்ற போது தான் எங்களால் அறிந்துகொள்ள முடியும்.
இதிலே சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறுமனே நாடாளுமன்றத்தில் குந்தி விட்டு எழும்பி வராமல் உன்னிப்பாக இவ்விடயத்திலாவது கவனம் செலுத்தி இந்த நாட்டின் அரச ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு என்ன நன்மை இருக்கின்றது என்பதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களை பிரதிபலிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உன்னதமான கடமையாகும்.
இந்த விடயத்தில் சமூக ஒற்றுமையை நாடாளுமன்றத்தில் வெளிக்காட்ட வேண்டிய தருணம் இதுவாகும்.
இதேவேளை ஒரு பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது கடந்த காலத்தில் ஒரு வலுவை ஏற்படுத்திய இருபதாவது சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் இன்று சிறுபான்மையினர் சிறையில் அடைக்கப்படுவதற்கு காரணமாக இருந்ததைப் போன்று இந்த வரவு செலவுத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாடு படுத்துகின்ற அல்லது பழி வாங்குகின்றன ஒரு வரவு செலவுத் திட்டமாக அமையக்கூடாது.
இதில் இருக்கின்ற நன்மைகளையும் தீமைகளையும் தெளிவாகப் புரிந்து இதற்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.