சட்ட விரோத மணல் அகழ்விற்கு முடிவு கட்ட அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரியாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று(06.06.2021) நேரடியாகச் சென்ற கடற்றொழில் அமைச்சர், சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், படைத்தரப்பினர் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.
பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இன்றைய விஜயம் அமைந்திருந்த நிலையில், சட்ட விரோத மணல் அகழ்வு முற்றாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டுமாயின், பாதுகாப்பு தரப்பினர் காவலரன்களை அமைத்துக் கண்காணிக்க வேண்டும் என்று பிரதேச மக்களினால் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடிய அமைச்சர், அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்ட விரோத மணல் அகழ்வை முழுமையாகக் கட்டுப்படுத்துமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.