இலங்கையின் கடல் வளம் காக்கப்படும்!- அமைச்சர் சந்திரசேகர்
"இலங்கையில் கடல் வளம் மற்றும் நீரியல் வளங்களைப் பாதுகாப்பதற்குரிய அத்தனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். இதற்காக நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும். இந்தத் துறையில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மீனவர் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு அக்வா பிளான்ட் இலங்கை – 2025 சர்வதேச மீன்வளக் கண்காட்சி நேற்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார்.

அலங்கார மீன்களின் அதிசயங்கள்
இன்று முதல் நாளை மறுதினம் வரை நடைபெறும் குறித்த சர்வதேச கண்காட்சியில் அலங்கார மீன்களின் அதிசயங்கள், கடல்வாழ் உயிரினங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் பரந்த அளவிலான கடல்சார் பயன்பாடுகள் என்பன காட்சிப்படுத்தப்படும். இதற்குக் கட்டணம் எதுவும் அறிவிடப்படமாட்டாது.
எனவே, மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைவரும் பங்கேற்று பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வின் பின்னர், உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நினைவு முத்திரையும் வெளியீட்டு வைக்கப்பட்டதோடு, மீனவர்களுக்குரிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
அத்துடன், கடற்றொழிலில் இதுவரை குற்றம் இழைக்காத மீனவர்களுக்குப் பாராட்டு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி இந்த நிகழ்வில் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டாக்டர் பீ.கே.கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே, அமைச்சின் அதிகாரிகள், தெற்காசிய நாடுகளின் சிரேஷ்ட பிரதிநிதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இன்று ஆரம்பமான இந்தக் கண்காட்சி 3 நாட்களுக்குத் தொடர்ந்து இடம்பெறுகின்றது. இதனைப் பார்வையிட வருமாறு மாணவர்கள் உட்பட அனைவரையும் அழைக்கின்றேன்.

மாநாட்டின் முதன்மை நோக்கம்
இந்தப் பிராந்தியத்தில் நடக்கும் மிகப் பெரிய கண்காட்சி இதுவாகும் என இதில் பங்கேற்றுள்ள ஒருவர் குறிப்பிட்டார். இதனை எமது நாட்டில் நடத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பு பெருமையளிக்கின்றது.
இதன்மூலம் உலகின் கவனத்தையும் ஈர்க்கலாம். எமது அமைச்சின் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு காரணமாகவே இவ்வளவு பெரிய கண்காட்சியை எம்மால் சிறப்பாக நடந்த முடிந்துள்ளது.
அமைச்சின் பிரதி அமைச்சர் மற்றும் செயலாளர், பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகள்.
எமது நாட்டு கடல் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதே மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். இது விடயத்தில் ஜனாதிபதியின், ஏனைய அமைச்சர்களின் அரசின் முழு ஆதரவும் எமக்கு இருக்கின்றது.
அதேவேளை, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மூலம் எமது நாட்டு கடல் வளத்தை நாசமாக்கும் நடவடிக்கையில் சிறு மீனவக் குழுவொன்று ஈடுபட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் கடற்படையினர் முன்னர் போல் அல்ல. அவர்கள் தற்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்குச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர்." - என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |