வவுனியாவில் மினி சூறாவளி: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! (Video)
வவுனியாவில் மினிசூறாவளியுடன் கூடிய மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த சில தினங்களாக மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், இன்று (24.03.2023) மாலை மினிசூறாவளியுடன் கூடிய கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
போக்குவரத்து சில மணிநேரம் தடை
குறிப்பாக காற்றின் வேகம் அதிகரித்தமையால் நகரின் முக்கிய வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தன. இதனால் வீதிகளுடனான போக்குவரத்தும் சில மணிநேரம் தடைபட்டுள்ளது.
மாவட்ட செயலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, வைத்தியசாலை, நீதிமன்றத் தொகுதி, கந்தசாமி கோவிலடி, பூந்தோட்டம், மகாறம்பைக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
இதேவேளை பல இடங்களில் மரக்கிளைகள் வீடுகளுக்கு மேல் முறிந்து வீழ்ந்ததில் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் மதில்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட
கொட்டகை மீது மரம் முறிந்து விழுந்தமையால் மயிரிழையில் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்த தாய்மார் உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த மினிசூறாவளியுடன் கூடிய மழையின் காரணமாக வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2225 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகைக்கு மேலே அருகில் இருந்த மரம் ஒன்றின் பாரிய கிளை முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் போராட்ட கொட்டகையின் ஒரு பகுதி தகரக் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், மரக்கிளைகளும் போராட்ட கொட்டகைக்குள் விழுந்துள்ளது.
மயிரிழையில் உயிர் தப்பிய மக்கள்
இவ் அனர்த்தத்தால் போராட்ட கொட்டகை பகுதியிளவில் சேதமடைந்துள்ளது.
குறித்த அனர்த்தத்தின் போது போராட்ட கொட்டகைக்குள் 5 தாய்மார் இருந்த போதும் அவர்கள் எந்தவித பாதிப்புமின்றி மயிரிழழையில் உயிர் தப்பியுள்ளனர்.
அவர்களது உடமைகள் சில உடைந்தும், மழையில் நனைந்தும் சேதமடைந்துள்ளன.