துரித கதியில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடியகற்கும் பணி
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தன்னார்வ தொன்டு நிறுவனமான ஸார்ப் நிறுவனம் ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளின் நிதியுதவியுடன் கண்ணிவெடியகற்றும் பணிகளை துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது.
இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 80,468 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
குறித்த வெடிபொருட்கள், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தச்சடம்பன், அம்பகாமம், ஒலுமடு மற்றும் மாங்குளம், கொக்காவில் பகுதியிலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதியிலும்; கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை கிளாலி இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் கண்டாவளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி ஆகிய பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு அம்பகாமம் மாங்குளம் கொக்காவில் தட்டுவன்கொட்டி கிளாலி மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

