நியூசிலாந்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கையர் - குடியுரிமை பெற்றமை தொடர்பில் சர்ச்சை
நியூஸிலாந்தின் ஒக்லேன்ட் சுப்பர் மார்க்கெட்டில் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டு 7 பேரை காயப்படுத்தியமையினால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கை பூர்வீகம் கொண்ட நபர் தொடர்பில் மேலும் சில தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சூதீன் ஆதில் என்பவரே கொலை செய்யப்பட்டிருந்தார். ஆதில் என அழைக்கப்படும் இந்த நபர் 2011ஆம் மாணவர் விசா மூலம் நியுஸிலாந்திற்கு வருகைத்தந்தவர் என அந்நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.
நியூசிலாந்து சென்ற ஆதில் 2013ஆம் ஆண்டு அகதிகள் விசாவிற்கான விண்ணப்பித்துள்ளார். தனது தந்தை தமிழர் எனவும் இலங்கை அதிகாரிகளால் அவர் பல்வேறு விதமான தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் ஆதில், அதிகாரிகளிடம் கூறினார்.
இந்த விடயத்தை அடிப்படையாக கொண்டு நியூசிலாந்து அகதிகள் தொடர்பில் செயற்படும் பிரிவினால் ஆதிலுக்கு அந்த நாட்டு அகதி விசாவின் கீழ் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் 2016ஆம் ஆண்டு அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட பயங்கரவாதம் தொடர்பான வீடியோ மற்றும் பதிவுகள் தொடர்பில் கவனம் செலுத்திய அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் அவரை தீவிரமாக கண்கானிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கிய நிலையில் ஆதில் மீது 23 பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு நியூசிலாந்து அகதிகள் தொடர்பில் செயற்படும் பிரிவினரால் ஆதிலை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தான் தமிழ் பூர்வீகம் கொண்டமையினால் தனக்கு இலங்கை செல்ல பயமாக உள்ளதென ஆதில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அதிகாரிகள் தன்னை போன்ற தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்வதாகவும், அந்த பயம் தான் நியூஸிலாந்தில் உள்ள போதே உணர முடிவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஆதிலின் அடையாளங்களை வெளியிட வேண்டாம் என அந்த நாட்டு நீதிமன்றத்தினால் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அந்த நாட்டில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் பயங்கரவாதத்தை பரப்பியமை மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருந்தமை தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் அந்த நாட்டு அதிகாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan