வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (10.05.2023) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (11.05.2023) நண்பகல் 12.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று காலை 08.30 மணியளவில் 8.80N மற்றும் 88.90Eக்கு அருகில் மையம் கொண்டது. இது இன்று மாலையில் புயலாக வலுவடைந்து பின்னர் மத்திய வங்கக் கடலில் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பு வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இதன்படி, மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் போது அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.