வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்கப்பிரதிநிதிகளை சந்தித்தார் சிறீதரன் எம்.பி (Photos)
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான 'அறிவகத்தில்' இன்றைய தினம் (28.02.2023) இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
இதன்போது சமகாலத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகளின் அதிகரிப்பு, எல்லை தாண்டிய மற்றும் சட்டவிரோத மீன்பிடியால் கடற்றொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும் வாழ்வாதார இடர்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்த விடயங்களுக்கு உரிய தீர்வினைப் பெற தன்னாலான முயற்சிகளை முன்னெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் இதன்போது உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.