முன்னாள் அமைச்சர் மேர்வினுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு
அண்மையில் களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் கொழும்பில் உள்ள பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கை வைத்தால், கை வைப்பவர்களது தலையை எடுத்து களனிக்கு கொண்டு செல்வதாக, களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அவரது இந்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எதிராக கடந்த 16.09.2023 அன்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
அந்த முறைப்பாட்டுக்கு வட்டுக்கோட்டை பொலிஸார் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் முருகவேல் சதாசிவம் கொழும்பில் உள்ள இலங்கை பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இது குறித்து முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




