இலங்கை மக்களை விடாது துரத்தும் வாழ்க்கைச் சுமை! கடனுக்கும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை
நாட்டின் பல பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் நுகர்வோருக்கு கடனுக்கு பொருட்களை விற்பனை செய்வதை முற்றிலுமாக நிறுத்தி விட்டதாகவும் அத்தியாவசியப் பொருட்களை பணத்திற்கு மட்டுமே விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
கிராமப்புறங்களில் உள்ள ஏராளமான மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அருகிலுள்ள கடைகளில் கடன் வாங்கி மாதக் கடைசியில் கடனை அடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கடன் வழங்குவதை நிறுத்திய வியாபாரிகள்
இவ்வாறான நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், கடைக்காரர்கள் கடனுக்கு பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு, பணத்திற்கு மட்டுமே விற்கின்றனர்.
மொத்த விற்பனை நிலையங்களில் இருந்து இன்று கொள்வனவு செய்யப்படும் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதே பணத்தில் நாளை அதே பொருளை கொள்வனவு செய்வதற்கு மேலதிகமாக பணம் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் கடன் வாங்கி கடைகளை நடத்துவது பெரும் சிக்கலாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு இல்லாததால் ஏராளமான கடைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



