போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்காக கொழும்பில் நல்லிணக்க தூபி! ஜனாதிபதியின் நிலைப்பாடு
''போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்காக கொழும்பில் நல்லிணக்க தூபி ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாக'' கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
போரில் உயிரிழந்தவர்களை ஒன்றாக நினைவு கூர நினைவு தூபி
‘‘1983 -2008 உள்நாட்டு இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் பலர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களை ஒன்றாக நினைவு கூருவதற்கு ஒரு நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரவையில் முன் வைத்தேன்.
எனது கோரிக்கையை ஜனாதிபதி சாதகமாக பரிசீலித்த நிலையில் கொழும்பில் நினைவு தூபியை அமைப்பதற்கான இடத்தினை அடையாளப்படுத்துவதற்காக குழு ஒன்றை அமைப்பதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சாதகமான பதிலை இட்டு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனெனில் இன மத மொழி வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்.
இனப் பிரச்சினை தீர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும்
நான் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரித்ததற்கு ஒரே ஒரு காரணம் நாட்டில் உள்ள பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அதை அவர் நிறைவேற்றினார்.
தற்போதய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற போது அவருக்கு நான் வெளிப்படையாகவே எனது ஆதரவை தெரிவித்தேன்.
ஏனெனில் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகளில் இருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஆளுமை அவரிடமே காணப்படுவதை உணர்ந்து எனது வெளிப்படையான ஆதரவை தெரிவித்தேன்.
அவர் ஜனாதிபதியாக உள்ள நிலையில் மக்கள் நினைவேந்தல்களை மேற்கொள்வதற்கு எந்த தடையும் மேற்கொள்ளப்படவில்லை.
போராட்டத்தின் போது இந்த நாட்டில் பல்வேறு இளைஞர் யுவதிகள் கட்சி சார்ந்து அரசியல் குழுக்கள் சார்ந்து செயற்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் அவர்களையே நினைவு கூறுவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதற்கு ஜனாதிபதி நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்காலத்தில் அனைத்து இன மக்கள் சார்ந்து நினைவேந்தல்களை மேற்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்புகிறேன்.
ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் இதயசுத்தியுடன் அவரின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்‘‘ என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)