ரணிலுடன் இணைய தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் செயற்பட தாயராகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட டயனா கமகேவுக்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் அதிருப்தியடைந்துள்ள டயனா கமகே, தனது முன்னாள் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் செயற்பட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
றிசாட் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரை தவிர அவர்களின் கட்சிகளை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தச்சட்டத்தை ஆதரித்து வாக்களித்திருந்தனர்.
அவர்களும் ஒரு அணியாக ரணில் விக்ரமசிங்கவுடன் இணைய தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள ஓரே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்தாலும் அவர் நாடாளுமன்றத்தில் சிறிய நாடாளுமன்ற குழுவின் தலைவராக செயற்பட வாய்ப்பு கிடைக்கும் என அந்த தகவல்கள் மேலும் கூறியுள்ளன.