ரிசாத் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள முஷாரப் எம்.பி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எஸ். எம். முஷாரப் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக நேற்று (27) உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.
வழக்குத்தாக்கல்
நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 31ம் திகதி நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடாத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் கட்சியின் யாப்புக்கு எதிராகவும் அதன்
தீர்மானங்களுக்கு எதிராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டார் என்று தெரிவித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மக்கள் காங்கிரஸ் கட்சியானது குறித்த நாடாளுமன்ற உறுப்பினரினை கட்சியிலிருந்து நீக்கியமை தொடர்பாக இம் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்திருந்தது.
இந்த ஒழுக்காற்று விசாரணை கட்சியின் பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம். ஷஹீட் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
விடுபடல்
20க்கு ஆதரவளித்த மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ஏ. ரஹ்மான் போன்றவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணைக்கான அழைப்பு கட்சியினால் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரையில் அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையினையும் மக்கள் காங்கிரஸ் எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.