ஜனாதிபதிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு! சட்டத்தரணி யோதிலிங்கம் வெளியிட்ட தகவல்
மத்திய அரசினை சிங்கள பௌத்த அரசாக வைத்துக்கொண்டு எந்தத் தீர்வை வழங்கினாலும் அது ஒருபோது நடைமுறைக்கு வரப்போவதில்லை என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,''தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியுள்ளது. இது ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் நடைபெற்ற ஒன்று அல்ல. தமிழரசுக்கட்சி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதன் பெயரில் நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது.
தொடர் பேச்சுவார்த்தை
சாணக்கியனின் தந்தையாரின் மரணச் சடங்கிற்கு வந்த ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே சந்திப்பு துரிதப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி விருப்பத்தோடு இதில் பங்கு பற்றவில்லை.
அந்த விருப்பமின்மை அவருடைய பதில்களிலிருந்தும், முகபாவனையிலிருந்தும், நீண்ட இழுத்தடிப்பிலிருந்தும் தெளிவாகத் தெரிந்தது.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தால் தமிழ்த்தரப்பு தூர விலகிச் செல்லக்கூடாது என்பதும் சந்திப்புக்கு காரணமாக இருக்கலாம். சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களுக்கு கால வரையறை எதனையும் ஜனாதிபதி கூறவில்லை. தெளிவான பதில்களையும் கூறவில்லை. தொடர் பேச்சுவார்த்தைக்கான திகதிகளும் குறிப்பிடப்படவில்லை.
பேச்சுவார்த்தையின் போது அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், ஆக்கிரமிப்பு விடயங்கள் என பல விடயங்கள் பேசப்பட்டன. அரசியல் தீர்வு பற்றியே அதிக நேரம் பேசப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர், பதில் செயலாளர், உட்பட 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
சுமந்திரன் அரசியல் தீர்வு பற்றி கருத்துக்களை கூற ரவிகரன், சத்தியலிங்கம், குகதாசன் ஆகியோர் ஆக்கிரமிப்புகள் பற்றிய கருத்துக்களைக் கூறினர்.
சிறீதரன் பொதுப்படையாக சகல விடயங்களையும் தொட்டு கருத்துக்களைக் கூறினார். ஜனாதிபதி அனைவருடைய கருத்துக்களையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
இதன்போது அரசியல் தீர்வு விவகாரம் “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனையையே மையப்படுத்தியிருந்தது. ஏக்கியராச்சிய தீர்வு யோசனையை கடைசி வரையும் ஏற்க மாட்டோம் எனக் கூறியிருந்த சிவஞானமே அதனைத் தொடக்கி வைத்தார்.
சுமந்திரனின் கட்டளை
சுமந்திரனின் கட்டளையை மீறிச் செயற்படும் ஆளுமை அவருக்கு இருக்கவில்லை. சிவஞானம் ஆரம்பத்திலேயே சமஸ்டி என்ற பதம் முக்கியமில்லை. சமஸ்டி முறைமையே முக்கியம் எனக் கூறியிருந்தார், இவ்வாறு கூறும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தார்களோ தெரியவில்லை.

தமிழ் மக்கள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை. பெயரில்லாமல் உடல் இருந்தால் மட்டும் போதும் என்ற வகையிலேயே அவரது கருத்து இருந்தது. பெயரை மறைத்து வைத்து விட்டால் சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என அவர் கருதுவது போலவே தெரிகின்றது.
சிங்கள மக்களை அடி முட்டாள்களாக அவர் நினைத்திருக்கலாம். சமஸ்டி ஆட்சி முறையின் அவசியத்தை சிங்கள மக்களுக்கு கூற வேண்டியது சிங்கள அரசியல் சக்திகளின் கடமை என்பதை தெளிவாக வலியுறுத்துவதற்கு பதிலாக பெயர் தேவையில்லை, உடல் தான் முக்கியம் என்கின்ற குறுக்கு வழியில் சிவஞானம் செல்லப் பார்க்கின்றார். தொடர்ந்து “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனை பற்றி சுமந்திரனே பேசினார்.
இதேவேளை சுமந்திரனின் உரையாடல் நீதிமன்றத்தில் சட்டத்தரணி வாதங்களை முன் வைப்பது போல இருந்தது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் முன்வைத்தே அவர் உரையாடலை நடாத்தினார்.
இவற்றுக்கெல்லாம் ஜனாதிபதியின் ஒரே பதில் ஜனவரியில் அரசியல் தீர்வு பற்றிய உரையாடலை ஆரம்பிக்கலாம் என்பதாகவே இருந்தது.
ஆரம்ப உரையாடலில் கோட்பாட்டு விடயங்களை பேசியிருக்கலாம். திம்பு பேச்சு வார்த்தையின் போது கோட்பாட்டு விடயங்களே முதலில் பேசப்பட்டன.
ஜே.வி.பி.யினர் வரித்துக்கொண்ட மாக்சீய சித்தாந்தங்களினூடாகவே கோட்பாடு தொடர்பான உரையாடலை நகர்த்தியிருக்கலாம். அதற்கு மாக்சீய சித்தாந்தம் தொடர்பான ஆழமான புரிதல் சுமந்திரனுக்கு இருக்க வேண்டும்.
திம்பு பேச்சு வார்த்தையில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், வடக்கு - கிழக்கு தமிழ் மக்களுடைய பாரம்பரிய பிரதேசங்கள், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்கின்ற விடயங்களே பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டன.
கஜேந்திரகுமாரின் எதிர்வினை
தமிழரசுக் கட்சியின் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கான எதிர்வினை உடனடியாகவே கஜேந்திரகுமாரிடமிருந்து வந்தது. அவர் இரண்டு விடயங்கள் தொடர்பாக எதிர்க் கருத்துக்களை முன்வைத்தார்.
ஒன்று “ஏக்கிய ராச்சிய” தீர்வு யோசனையை அடிப்படையாக வைத்துப் பேசுவது இரண்டாவது அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தமிழரசுக் கட்சி மாத்திரம் முன்னெடுப்பது. இரண்டு கருத்துக்களிலும் நியாயங்கள் இருக்கின்றன.

அரசியல் தீர்வு பேச்சுவார்த்தையை தேசமாக முன்னெடுப்பது பயன்களைத் தரக்கூடியதாக இருக்கும் என்பது அவரது மற்றைய கருத்தாகும்.
உண்மையில் தேசமாக முன்னெடுப்பது கூட வெற்றியைத் தராது சர்வதேசம் தழுவிய வகையில் முன்னெடுக்கும் போதே வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும்.
எனவே தற்போதைய தேவை அரசியல் தீர்வுக்காக சர்வதேசம் தழுவிய வகை முன்னெடுக்கக்கூடிய ஒரு பேரியக்கமே.
இந்த உரையாடல்களினூடாக சர்வதேசத் தலையீடுகளையும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கலாம் சர்வதேச சக்திகளும் பிராந்திய சக்தியும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிராக இருப்பார்களே தவிர சமஸ்டிக் கோரிக்கைக்கு எதிராக நிற்க மாட்டா. சுவிஸ் அரசாங்கம் ஏற்கனவே சமஸ்டி அரசியல் தீர்வு பற்றிய உரையாடலை ஆரம்பித்துவிட்டது.
மேலும், திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் வனபரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் ஆக்கிரமிப்புகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்காக இருக்கப் போவதில்லை என்பதேயே காட்டுகின்றன இன்றைய தேவை ஆரோக்கியமான நகர்வுகளே என்று கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam