ஆறு வாரங்களுக்குள் மருந்து தட்டுப்பாடு நீங்கி விடும்:சுகாதார அமைச்சர்
நாடு முழுவதிலும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு அடுத்த ஆறு வாரங்களுக்குள் முற்றாக நீங்கி விடும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதி ஏற்கனவே கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
186 மருந்துகளுக்கு தட்டுப்பாடு
அத்தியவசியமாக தேவைப்படும் 14 மருந்துகள் ஏற்கனவே தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளன. எனினும் மேலும் 186 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
அந்த மருந்துகள் துரிதமாக இறக்குமதி செய்யப்படும் எனவும் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறை என்பன காரணமாக மருந்து உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அண்மையில் பாம்பு கடிக்கு தேவையான மருந்து இல்லாத காரணத்தினால், சிறுவன் உயிரிழந்த சம்பவமும் நடந்தது என்பது குறிப்பிட்டதக்கது.