வட பகுதியில் மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் (video)
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து தட்டுப்பாடு, மருந்துக்களின் விலை உயர்வு அதிகரித்துள்ளது.
இதற்கமைய கிளிநொச்சியில் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யக்கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக இன்று (06-12-2022) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் சில மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனியார் வைத்திய சாலைகளிலும் அதிகூடிய விலைகளிலும் மருந்துகளை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்டன போராட்டத்தில் வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் பங்கேற்று கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் பொறுப்புள்ள ஜனாதிபதி என்ற ரீதியில் ரணில் விக்ரமசிங்க இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்திற்காக அதிக நிதியை பரிந்துரை செய்ய வேண்டும் அல்லது வெளிநாடுகளில் இருந்து உதவிகளை பெற்றுக் கொள்ள பெற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கும், மருத்துவ உபகரணங்களுக்குமான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இம்முறை வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்திற்காக அதிகளவு நிதியை பரிந்துரை செய்ய வேண்டும் அல்லது வெளிநாடுகளில் இருந்து உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
காரணம் இன்று வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக செல்கின்ற நோயாளர்களில் பெருமளவானோருக்கு வைத்தியசாலைகளிலே மருந்து இல்லாத காரணத்தினால் வெளியிடங்களிலே மருந்துகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.
பொருளாதார சிக்கல் காரணமாக உணவுக்கு மக்கள் அன்றாடம் கஷ்டங்களை அனுபவிக்கின்ற நிலையில் அதிக விலை கொடுத்து மருந்துகளையும் வாங்க முடியாத ஒரு சூழலையை அவதானிக்க முடிகின்றது.
சாதாரணமாக இருபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பனடோலின் விலை தற்போது ரூ.50வையும் தாண்டியுள்ளது.
இவ்வாறு நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களினுடைய விலை அதிகரிப்பு என்பவற்றுக்கு அப்பால் மருத்துவ பொருட்களினுடைய விலைகளும் அதிகரித்து செல்கின்றது என தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் அதிகளவில் பெண்கள் பங்கு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்துவகைகள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்கவேண்டும், மருந்துகளை உடனடியாக பெற வழிவகை செய்ய வேண்டும், பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும், சுகாதார உரிமை எமது உரிமை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தி நின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: தீபன்
வவுனியா
மருந்து பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
வவுனியா குருமண்காடு சந்தியில் இன்று (06.11.2022) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசே அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழிவகை செய் என்ற பாதைகளை ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றமை கூறிப்பிடத்தக்கது.
செய்தி: திலீபன், ஷான்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவமனையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நீக்க கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் உணவுக்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் இந்த வகையில் மக்களின் வாழ்க்கை செலவு மேலும் அதிகரித்து செல்வதுடன் நாட்டில் மருத்துவதுறையிலும் இது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறுபட்ட முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் மக்களுக்கான இலவச மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவத்தினை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் வறுமைக்குட்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டமும் காணப்படுகின்றது
கிராம புறங்களில் வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் அதிகளவில் காணப்படும் மாவட்டமாகவும்
முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது என வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.