ஊடக ஒடுக்குமுறைச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: சாள்ஸ் நிர்மலநாதன்
ஊடக ஒடுக்குமுறைச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று(16.06.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊடகத்தை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படாமல் தடுப்பதற்காக அல்லது ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு எதிராக செயற்படுவதற்காக ஊடக ஒடுக்குமுறை சட்டத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
உண்மையில் ஊடக ஒடுக்குமுறைச் சட்டம் என்பது தேவையில்லை. ஜனநாயக வழியில் உண்மையை ஊடகங்கள் வெளிக் கொண்டு வரும் நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் ஊடகங்கள் ஊடாக வரக் கூடாது என்ற நோக்கத்திற்க்காக இதை கொண்டு வருகின்றார்கள்.
நீண்ட கால கொள்கை இல்லை
இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அத்துடன், இலங்கையின் பொருளாதாரக் கொள்கையில் நீண்ட கால கொள்கை இல்லை.
ஆட்சியாளர்கள் தாங்கள் நினைத்தவாறு தீர்மானங்களை எடுத்து தங்களது ஆட்சியை தக்க வைப்பதற்காக பௌத்த இராணுவ மேலாதிக்கத்தின் அடிப்படையில் தீர்மானங்களை எடுத்து வருகிறார்கள்.
பல அரச நிறுவனங்களால் அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை நடத்துவதற்கு யாரும் முன் வரமாட்டார்கள்.
இந்த நிறுவனங்கள் தொடர்பாக அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும்.
இவைதவிர, 1994 ஆம் ஆண்டு செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் மக்களுக்காக 400 ஏக்கர் காணிகள் ஒதுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு ஏக்கர் வழங்கப்படும் எனக் கூறி குடியமர்த்தினார்கள்.
பௌத்த மதகுரு அனுமதி
இன்னும் அந்த மக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட காணிகளில் 75 வீதமான காணிகள் வவுனியா தெற்கைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்த சிங்கள மக்கள் அபகரித்துள்ளார்கள்.
இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பேசியிருந்தேன். மதுராநகர் மக்கள் காணி இல்லை என குடியேறுகின்ற போது அதற்கு வவுனியா தெற்கு பௌத்த மதகுரு அனுமதித்தால் தான் காணி வழங்க முடியும் என மாவட்ட செயலகத்தில் எனக்கு பதில் வழங்கப்பட்டது.
ஆனால் வீரபுரத்தில் எமது காணிகளை அவர்கள் பிடிக்கிறார்கள். இது நிறுத்தப்பட்டு வீரபுரம் மக்களுக்கு அந்த காணிகள் பகிர்த்தளிக்கபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
