வவுனியா மாவட்டத்திற்கு மேய்ச்சல் தரைகளை உருவாக்க நடவடிக்கை - திலீபன் எம்.பி
வவுனியா மாவட்டத்தில் மேய்ச்சல் தரைகளை உருவாக்கவும், நகர்ப்புறங்களில் மாற்று வழிகளைக் கையாளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட பால் பண்ணையாளர்களுடன் சங்கத் தலைவர் எஸ்.கந்தசாமி தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா மாவட்ட பாற் பண்ணையாளர்களுக்கு நிறையப் பிரச்சனைகள் உள்ளன. மேய்ச்சல் தரை இல்லாமையால் அவர்கள் கஸ்ரப்படுகிறார்கள். ஜனாதிபதி மேய்ச்சல் தரை தொடர்பில் பேசியிருந்தார்.
காடுகளை அண்டிய பகுதிகளில் மேய்ச்சல் தரைகளை உருவாக்க முடியும். இருந்தாலும் நகர்ப்புறங்களில் இருக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கிறது.
இதற்கான ஒரு மாற்று வழியை கமநல அபிவிருத்தி திணைக்களத்துடன் பேசி மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன். அதைவிட, தற்போது 85 ரூபாய்க்குக் கொள்வனவு செய்யப்படுகின்ற பாலின் விலையை முதலாம் திகதிக்குப் பின் 90 ரூபாய்க்குக் கொள்வனவு செய்யப்படும் எனக் கால்நடை வளர்ப்பாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் மூலம் முடிவு எட்டப்பட்டுள்ளது.
வவுனியா கால்நடை வைத்திய நிலையம் பெரும் குறைப்பாடாக உள்ளது. இன்று அல்ல பல தடவை பல கோரிக்கைகளை முன்வைத்தும் அவை நிறைவேற்றப்படவில்லை. உரிய முறையில் வைத்திய அதிகாரியோ அல்லது மாற்று அதிகாரியோ அங்கு இல்லை.
அவசர தேவை என்றால் கூட அதைச் சென்று பார்க்க நீண்ட நாட்களாகிறது. இதனால் மாடுகள் இறக்கும் நிலை கூட ஏற்படுகிறது. இது தொடர்பில் விளக்கம் கோரி உரிய அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பத் திட்டமிட்டுள்ளேன்.
மாடுகளைப் பிடித்து எழுத்தமானமாக தண்டப்பணம் பெற்று வருகிறார்கள். இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இது தொடர்பில் விரைவில் கமநல அபிவிருத்தி திணைக்களம், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளேன்.
அதன் பின் இதற்குத் தீர்வு எட்டப்படும் என நம்புகின்றேன். வவுனியாவில் களவாக மாடுகள் வெட்டப்படுகின்றன. இது தொடர்பில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபருடன் பேசவுள்ளேன். இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
அவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டால் உடன் தெரியப்படுத்துமாறும் கால்நடை வளர்ப்போரிடம் கோரியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இக் கலந்துரையாடலின் போது கால்நடை வளர்ப்போர் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்திருந்ததுடன், பாற்பண்ணையாளர்கள் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.