யாழ். மேயர் மணிவண்ணனை உடன் விடுதலை செய்ய வேண்டும்! - கரி ஆனந்தசங்கரி கடும் கண்டனம்!
கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண மேயர் வி.மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கனேடிய அரசின் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பணம் மேயர் கைது செய்யப்பட்டமைக்கு தனது கடுமையான கண்டனத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூகத்தை சார்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் தன்னிச்சையான கைதுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்” எனவும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
I strongly condemn the arrest of #Mayor of Jaffna V Manivannan by the Sri Lankan govt, and call for his immediate release.
— Gary Anandasangaree (@gary_srp) April 8, 2021
The continued harassment & arbitrary arrests of members of the Tamil community including elected officials, journalists & human rights defenders must end. https://t.co/jDpguZ7Uxf
இதேவேளை, யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்றிரவு 8 மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட யாழ்ப்பாண மேயர் வி.மணிவண்ணன் 6 மணி நேர விசாரணைகளின் பின்னர் கைது செய்யபட்டார்.
கைது செய்யப்பட்ட மணிவண்ணன், வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரத்தைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக தண்டப் பணத்தை அறவிடும் செயற்பாட்டுக்காக யாழ். நகரக் காவல் படை என்னும் குழு யாழ்ப்பாணம் மாநகர சபையால் உருவாக்கப்பட்டது.
மாநகர சபை ஊழியர்கள் ஐவரைக் கொண்ட இந்தக் குழு பொது இடங்களில் குப்பை கொண்டுவோர், பொது இடங்களில் வெற்றிலை உமிழ்வோரிடம் தண்டம் அறவிடும் செயற்பாட்டில் ஈடுபடும் என்று முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்திருந்தார்.
அந்தக் குழுவுக்குப் பயன்படுத்திய சீருடை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்ட சீருடை ஒன்றை ஒத்திருந்தது என்று தெரிவித்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதையடுத்து அந்தக் குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
அந்த சீருடைகளைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாக்குமூலமும், சீருடையும் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர்.
மேலும் இன்று இடம்பெற்ற தேசியப் பாதுகாப்பு சபை கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.