வருமானத்தை காட்டச் சொல்ல வவுனியா மேயர் யார்: கேள்வி எழுப்பும் எதிர் கட்சி உறுப்பினர் பிறேமதாஸ்
எனது வருமானத்தை காட்டச் சொல்ல வவுனியா மேயர் யார். இவருக்கு இலங்கைக்கே மேயர் என்ற நினைப்பா என வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சி.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் நேற்று மாலை (22) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை கூறிக் கொள்வதுடன், மக்களின் உரிமைக் குரலாக நின்று பணியாற்றுவேன் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.
போலித் தமிழ் தேசியவாதிகள்
மக்களுடன் மக்களாக இருந்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற என்னை தோல்வியடைந்த 8 பேருடன் சேர்த்து ஆளும் கட்சியில் உள்ள 11 உறுப்பினர்கள் என்னை அரசியலில் வளர விடக் கூடாது என்பதற்காக புதிய சதித்திட்டங்களை தீட்டி பொய் வதந்திகளை பரப்பி என்னை அரசியலில் இருந்து விலகச் செய்வதற்காக பல சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய போலித் தமிழ் தேசிய வாதிகள் என்பவர்கள் யார். முன்னாள் ஆயுதக் குழுக்கள். தங்களுடன் 15, 20 வருடமாக கூட இருந்தவர்களையே கட்சியில் இருந்து விலக்க முயல்கிறார்கள். இவர்களுடன் நாம் எவ்வாறு கைகோர்ப்பது அரசியலில் புதிதாக யாராவது வந்தாலும் கூட அவர்களை வளர விடாமல் தடுக்கிறார்கள்.
தமிழ் தேசியம் என்ற போர்வையில் நின்று எமது மக்களின் வாழ்வுரிமையை சிதைத்து நிற்கிறார்கள். இன்று தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தவர் துரோகி என்கின்ற தமிழ் தேசிய வாதிகள் 2009 ஆம் ஆண்டு போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவை ஆதரிக்கவில்லையா அப்ப யார் துரோகி மக்கள் தமிழ் தேசியவாதிகளால் வஞ்சிக்கப்படுகிறார்கள்.இதற்கு முடிவு வேண்டும்.
சதித் திட்டங்களால் மக்களை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறார்கள். வவுனியா மாநகர மேயர் கூறுகிறார் நாம் மக்கள் சேவைக்காக வந்துள்ளோம் என யாழ் மண்ணில் தமிழரசுக் கட்சியும் சங்கும் சண்டை. சைக்கிள் ஒத்துபோகுதில்லை. தமிழரசு தமிழ் மக்களின் இருப்பை தக்க வைக்க ஈ.பி.டி.பியுடன் கூட்டு.
வவுனியாவில் தமிழனத்தை தக்க வைக்க எல்லோரும் ஒற்றுமை. கிழக்கில் தமிழனத்தை தக்க வைக்க முஸ்லிம் காங்கிரஸ்சுடன் சேர்ந்துள்ளார்கள். ஏன் தமிழ் பேசும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேரக் கூடாது. வடக்கு - கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஏன் ஒன்று சேர முடியாது. அரசியல் செய்வதற்காகவே இப்படி செய்கிறார்கள். தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக என்னை இழிவாகவும் தரக் குறைவாகவும் முகநூலில் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
தனி மனித அபிவிருத்தி
சாதாரண ஒரு மாநகர சபை ஆட்சிக்கே இப்படி பேசும் இவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்க முடியும். இவர்கள் மக்களின் சேவைக்காக வரவில்லை. தங்களின் பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் வந்தவர்கள். உள்ளூராட்சி தேர்தல் வட்டாரத் தேர்தல். தொட்டில் தொடக்கம் சூடுகாடு வரையான வேலையை செய்வதே அதன் வேலை. அதைக் கூட செய்ய விடுகிறார்கள இல்லை. குடிநீர் வசதியை நான் செய்ய முற்பட்ட போது எமது மேயர் என்னை பழிவாங்கும் நோக்குடன் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அதன் பின் தான் பழிவாங்கவில்லை. குடிநீர் சுத்திகரிக்க வேண்டும். அதன் தரச் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அதே மேயர் முன்னர் நகர சபை உறுப்பினராக இருக்கும் போது இந்த குழாய் கிணறு பழுதடைந்துள்ளது. திருத்துவதற்கு அவர் என்ன நடவடிக்கை எடுத்தார். நகரசபை களஞ்சியசாலையில் குழாய் கிணறு சம்மந்தமான உபகரணங்கள் இருந்தது. ஏன் அவர் சரி செய்ய முயலவில்லை. நாம் பழிவாங்கப்படுகின்றோம். இவர்கள் நேர்மையான அரசியல்வாதிகளா
தமிழ் தேசிய அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்தால் என்னுடன் பேச வாருங்கள் நான் தயார். என்னை வருமானக் கணக்கு காட்டும் படி மேயர் கேட்கிறார். அதை காட்ட நான் தயார். எனது வருமானம் கேட்க இவர் யார். இலங்கைக்கே மேயர் என்ற நினைப்பா இவருக்கு. அல்லது ஜனாதிபதி என்று நினைப்பா ஒரு லட்சத்து 39 ஆயிரத்து ரூபாய்ககு மின்குமிழ் வாங்கி போட்டுள்ளேன். முடிந்தால் வாங்கோ வருமானம் காட்டுகிறேன்.
மேயர் முடிந்தால் வருமான பரிசோதகர்களை அனுப்புங்கள். நான் கணக்கு காட்டுகிறேன். தனி மனித அபிவிருத்தியை செய்ய முடியாதவர் தான் மேயர். வாத்தியார் என்பதை தவிர வேற என்ன இருக்கு. ஆசிரியர் என்பது மதிக்க வேண்டியது. ஆனால் அவர் மற்றவரை கேவலமாக நினைக்க கூடாது எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
