வடக்கில் இடம்பெற்ற மே தினக் கூட்டங்கள் (Photos)
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (01.05.2023) பிரதான கட்சிகள், அரசியல்சார் தொழிற்சங்கங்கள் கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரியளவில் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.
அந்த வகையில் இன்றைய தினம் (01.05.2023) வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ். நகரில் நடைபெற்றுள்ளது.
குறித்த ஊர்வலமானது இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம்
உலகம் முழுவதும் மே தினம் உழைப்பாளர்கள் உரிமைக்காகக் கொண்டாடப்படுகின்ற நிலையில், இன்றைய தினம் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி ஊர்வலம் இடம்பெற்றது.
இதன்போது, பெருமளவு பொலிஸாரும் வீதிகளிலும் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்த போதும் குறைந்தளவானவர்களே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் இன்றைய தினம் (01.05.2023) மே தின கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதேவேளை புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று மாலை 4 மணியளவில் கல்வியங்காடு புதிய செம்மணி வீதிச் சந்தியில் இருந்து மே தினப் பேரணி ஆரம்பமாகி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நிறைவுற்று பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
ரணில் அரசாங்கத்தில் விலைவாசிகள், உழைக்கும் மக்களை அரசாங்கம் சுரண்டுகிறது, விவசாயத்தினை கூண்டோடு அழிக்கிறது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பேரணி இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மாக்சிச லெனினிசக் கட்சியில் செயலாளர் சி.க.செந்தில்வேல், உறுப்பினர் செல்வம் கதிர்காமநாதன், சட்டத்தரணி த.தேவராஜ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி - தம்பித்துரை பிரதீபன், கஜிந்தன், வடிவேலு சக்திவேல்,தீபன்
முல்லைத்தீவு - மேதின பவனியும் கூட்டமும்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி சிவன் கோவிலடிக்கு முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்த மே தின கூட்டம் சிறப்புற இன்றைய தினம் (01.05.2023) நடைபெற்றுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கட்சிகளின் ஏற்பாட்டில் மே தின கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தில் மாத்திரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மே தின கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழ்த் தேசிய தொழிலாளர் அடக்குமுறையினையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வளச்சுரண்டல் நில ஆக்கிரமிப்பு வழிபாட்டுரிமை மீறலையும் நயவஞ்சக அரசியலையும் வெளிப்படுத்தும் ஊர்தி பவனியும் தொழிலாளர் எழுச்சி நிகழ்வும் சிறப்பு நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராச கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
செய்தி - முல்லை கீதன்
வவுனியாவில் மேதின ஊர்வலம்!
புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டமும், ஊர்வலமும் வவுனியாவில் இன்றைய தினம் (01.05.2023) காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய ஊர்வலம் கடைவீதி வழியாக வைத்தியசாலை சுற்று வட்டத்தை அடைந்து, அங்கிருந்து வவுனியா மாநகர மண்டபத்தை அடைந்துள்ளது. அங்கு மேதினக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.பகிதரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், தேசிய அமைப்பாளர் வே.மகேந்திரன், வன்னி மாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைத்தலைவர் பூ.சந்திரபத்மன், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக கே.ஜிந்திசன், தொழிற்சங்கம் சார்பாக க.மகேந்திரன், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் சார்பில் சிவந்தினி ஆகியோர் சிறப்புரையாற்றியுள்ளனர்.
ஊர்வலத்தின் போது விலையேற்றத்தைக் கண்டித்தும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயற்பாட்டைக் கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், ஐஎம்எப் உடன்படிக்கை சித்தரிக்கும் ஊர்தியும் ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த ஊர்வலத்தில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தினக் கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (01.05.2023) இடம்பெற்றுள்ளது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் அவர்களின்
தலைமையில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண ஜீவோதய
நலன்புரி நிறுவனத்தினரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஊழியர் நலன் சார் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.
செய்தி - வசந்தரூபன், கீதன்
கிளிநொச்சி
அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்போம், மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் எனும் தொனிப்பொருளில் சமத்துவக் கட்சியின் மே தினம் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று பெருமளவான மக்களின் பங்கேப்புடன் இடம்பெற்றது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சமத்துவக் கட்சியின் தவிசாளர் சு.மனோகரன் தலைமையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு தொழிற்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் சிவில் மற்றும் பொது அமைப்பின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பெருளமானவர்கள் கலந்துகொண்டனர்.
பல தொழிற்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
இங்கு உரையாற்றி சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார், நாட்டில் சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் உருவாக்குவதற்குப் பதிலாக அதற்கு எதிராகவே ஆட்சி நடாத்தப்படுகிறது.
சுதந்திரத்துக்குப் பின்னர் நாடு சிந்திய கண்ணீரும் இரத்தமும் கொஞ்சமல்ல. இதிலிருந்து நாம் மீள வேண்டும்.
இனியும் சம்பிரதாயமான அரசியல் வாக்குறுதிகளை நாம் நம்ப முடியாது. சம்பிரதாயமான மேதின நிகழ்வை நடாத்துவதில் அர்த்தமில்லை. இன்று பிற நாடுகளிலும் சர்வதேச வங்கிகளிடத்திலும் அடமானமாகியுள்ள நாட்டில் நாம் போராடாமல் இருக்க முடியாது.
எமது போராட்டம் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாக இருக்கட்டும். மக்களின் விடுதலையை நோக்கியதாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்.
செய்தி-சுழியன்





















பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
