மத்தள சர்வதேச விமான நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானங்கள்
மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலாபம் ஈட்டும் நிறுவனம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகள் விற்கப்படவுள்ளன. அத்துடன் இந்த விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும்.
நாட்டில் விமான போக்குவரத்து செயல்முறையை மறுசீரமைக்கும் போது அந்நிய செலாவணியை ஈட்டும் வகையில் விமான நிலையம் மாற்றப்பட வேண்டும். அதற்காக பராமரிப்பு தரத்தையும் மேம்படுத்த வேண்டும்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்
இதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பாதுகாப்பு வலையமைப்பாகவும், இரண்டாவது விமான நிலையமாகவும் மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்படும்.
மத்தள விமான நிலையத்தில் தேவைப்படும் வசதிகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு விமான நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.