மன்னாரில் தொடரும் பதற்றம்! பொலிஸார் - விசேட அதிரடிப்படையினர் கண் மூடித்தனமாக தாக்குதல்
புதிய இணைப்பு
மன்னாரில் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, பதற்றமான சூழ்நிலைக்கு மத்தயிலும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
மன்னாரில் நேற்று(26) வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் பொலிஸார் மேற்கொண்டு தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகருக்குள் பல பாரிய வாகனங்களில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைப்பதற்கான உபகரணங்கள் வன வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் கொண்டுவரப்பட்டு கொண்டிருந்தது.
கண் மூடித்தனமாக தாக்குதல்
இந்த நிலையில் தொடர்ச்சியாக 55 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்ட குழு, மாவட்ட மக்கள் கத்தோலிக்கு அருட்தந்தையர்கள் உள்ளடங்களாக பல நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் என பல நூற்றுக்கணக்கானவர்களின் பாதுகாப்புடன் பல வாகனங்களில் காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பொருட்கள் மன்னார் நகருக்குள் கொண்டுவரப்பட்டது.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதியை மறித்து போராட்டங்களை மேற்கொண்டனர்.
இதன் போது பெண் பொலிஸார் இல்லாத நிலையில் ஆண் பொலிஸார் பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களையும் மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்து அருட்தந்தையர்கள் உள்ளடங்களாக அனைவர் மீதும் பொலிஸார் கண் மூடித்தனமாக தாக்குதலையும் மேற்கொண்டதோடு தேவையற்ற வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இதனால் தற்போது குறித்த பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது.
காயப்பட்டவர்கள் நோயாளர் வாகனம் மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தற்போது வரை பதற்ற நிலை ஏற்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
முதல் இணைப்பு
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான கலகமடக்கும் பொலிஸார் பாதுகாப்புடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில் வண்ணார் நகரை நோக்கி கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து மன்னார் நுழைவு பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
மன்னாரில் பதற்றம்
கலகமடக்கும் பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது.
இதனால் மன்னார் நகர பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.












