கொழும்பு துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் 1,700 கொள்கலன்கள்!
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கான பிரதான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டில் தற்போது பாரியளவில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில், எதிர்வரும் 18 ஆம் திகதி வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.