அத்தியாவசிய பொருட்களின் சந்தைவிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டும்: கரு ஜயசூரிய
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை உற்று நோக்கும் போது நாட்டு மக்களை அசௌகரியத்தில் ஆழ்த்தும் அநீதியான சந்தை உருவாகி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக அண்மை காலங்களில் சீனி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலை குறைவடைந்திருந்தபோதிலும், அதற்கு நிகரான சந்தை விலை காணப்படாமையினால் சாதாரண நுகர்வோருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அரசாங்கத்தின் கடமை என்று நாம் கருதுவதினால் இதற்கான உகந்த நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
திறந்த பொருளாதார சந்தை முறையில் விலை கட்டுப்பாடு போன்ற நடைமுறை சாத்தியமில்லாத அணுகுமுறைகளுக்கு பதிலாக அத்தியாவசிய பொருட்களின் விலையை ஒழுங்குப்படுத்தும் முறையை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
நியாயமான சில்லறை விலையை நியமித்தல்

கடந்த 1980ஆம் ஆண்டில் திறந்த பொருளாதாரத்தையும், உள்நாட்டு சீனி உற்பத்தியாளர்களையும் பாதுகாத்துக் கொண்டு சீனியின் சந்தை விலையை நியாயமான முறையில் பேணுவதற்கு சீனி உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், திரைசேரிக்கும் இடையில் நடைமுறைப்படுத்திய நடைமுறையை தற்போது பயன்படுத்தலாம் என்பது எமது நம்பிக்கையாகும்.
இதன்போது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் சீமந்து போன்ற பொருட்களுக்கும் நியாயமான சில்லறை விலையை நுகர்வோர் சேவைகள் அதிகார சபை நியமிக்கலாம்.
பொருளாதார நெருக்கடி
Indicative price எனும் நடைமுறை கடந்த 2000ஆம் ஆண்டு முதல் பாகத்தில் வெற்றிகரமாக இயங்கியதை குறிப்பிட வேண்டும்.
தற்போது நாடு முகம் கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வணிக மற்றும் நிதித்துறை பாரிய சவால்களுக்கு உள்ளாகி இருந்தாலும், சில பொருட்கள் மற்றும் சேவைகளில் விலை அதிகரிப்பை தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது.
குறுகிய நோக்கங்களுக்காக செயற்படும் சில அதிகாரிகளும் அரச உத்தியோகத்துர்களின் அனுசரனை பெற்ற வர்த்தகர்களும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்பது
அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அண்மை காலங்களில் இலங்கையில் இடம் பெற்ற பாரிய ஊழலாக கருதப்படும் சீனி வரி மோசடி ஊடாக சம்பாதித்த பெருமளவு பணத்தை
இதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டலாம் என குறிப்பிட்டுள்ளார்.