ராஜபக்ச அரசாங்கத்துக்கு மார்ச் மாதம் வாய்ப்பா, சவாலா?

Opportunity Challenge Rajapaksagovernment
By Independent Writer Feb 10, 2022 12:36 PM GMT
Independent Writer

Independent Writer

in கட்டுரை
Report
Courtesy: Koormai

இலங்கை வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் புதுடில்லிக்குச் சென்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உட்படப் பலரைச் சந்தித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார்.

இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முயற்சி (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பிம்ஸ்டெக் அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் ஜனாதிபதி, பிரதமர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் டென்சின் லெக்ப்ஹெலிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளை உள்ளடக்கி 1985 ஆம் ஆண்டு சார்க் எனப்படும் தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு (The South Asian Association for Regional Cooperation- SAARC) ஒன்று உருவாக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இந்த அமைப்பில் பாகிஸ்தான் அங்கம் வகிப்பதால், பாகிஸ்தானைத் தவிர்த்தே பிம்ஸ்டெக் எனப்படும் அமைப்பு 1997 ஆம் ஆண்டு இந்தியாவினால் உருவாக்கப்பட்டது. இதனால் சார்க் அமைப்புச் செயலிழந்தது. சார்க் அமைப்பைவிட பிம்டெக்ஸ் அமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் இந்தியா, தற்போது இலங்கையின் தலைமையில் உள்ள பிம்டெக்ஸ் ஊடாக வர்த்தகச் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்த முயற்சிக்கின்றது.

சீனாவுக்கு எதிராக இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் குவாட் (The Quadrilateral Security Dialogue -QSD or QUAD) என்ற அமைப்பில் அமெரிக்கா, இந்தியா. ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இது ஒரு இராணுவக் கூட்டணியாகும். இந்தவொரு நிலையில் இந்தியா, கடந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் Supply Chain Resilience Initiative (SCRI) என்ற அமைப்பை QUAD உறுப்பு நாடுகளான ஜப்பானுடனும் அவுஸ்திரேலியாவுடனும் இணைந்து உருவாக்கியது.

ஆனால் உடனடியாகவே இந்தியாவைத் தவிர்த்து பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் அடங்கலாக தெற்கு நாடுகளின் வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு மையத்தை (China-South Asian Countries Poverty Alleviation and Cooperative Development Centre) சீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம் உருவாக்கியிருந்தது.

இலங்கை, பங்களாதேஸ் போன்ற வறுமை நாடுகளுக்கே அதிகளவு நிதியுதவி செய்வதெனவும் அந்த அமைப்பின் உருவாக்கத்தின்போது சீனா அறிவித்திருந்தது. ஆசியான் (ASEAN) நாடுகளுக்கான உலகின் மிகப் பெரிய பொருளாதாரக் கூட்டாக (Regional Comprehensive Economic Partnership- RCEP) என்பதை 2020 ஆம் ஆண்டு நவம்பரில் சீனா ஆரம்பித்திருந்தது. RCEP எனப்படும் இந்த அமைப்பில் அமெரிக்க நட்பு நாடுகளான அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் பங்குபெறும்போதும், இந்தியா அதில் பங்கேற்காது விலகியிருந்தது.

இச்சூழலில் தன்னைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கிய தெற்கு நாடுகளின் வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு மையத்தைப் பயன்படுத்திச் சீனா இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளுக்கு நிதியுதவி செய்யும் திட்ட வரைபுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, பிம்ஸ்டெக் என்ற அமைப்பின் செயற்பாட்டைத் துரிதப்படுத்த இந்தியா முற்படுகின்றது.

கடந்த ஆறாம் ஆம் திகதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிம்ஸ்டெக் மாநாடு குறித்தும், மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பங்குபற்றல் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையிடம் அதன் தலைமைப் பொறுப்பு இருப்பதால் அதிகார பூர்வமாக பிம்ஸ்டெக் மாநாடு தொடர்பான உரையாடலை அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் நடத்தியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குத் தொள்ளாயிரம் (900) மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்படுமெனக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பல்கே சென்ற ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வியாழக்கிழமை அறிவித்திருந்த நிலையில், மேலும் ஒரு பில்லியன் டொலர் வழங்கப்படுமென ஜனவரி 15 ஆம் திகதி இந்தியா உறுதியளித்திருந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் ஜனவரி 15 ஆம் திகதி இணையவழி ஊடாக நடத்திய உரையாடலில் இந்த நிதியுதவித் திட்டங்கள் குறித்துப் பேசப்பட்டிருக்கின்றன.

ஜனவரி மாதம் ஆறாம் திகதி அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் ஆகியோர் தொலைபேசி மூலம் உரையாடிய பின்னரே தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் மீண்டும் ஐம்பது வருடங்களுக்கு இந்தியாவுக்குக் கையளிக்கும் ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அன்றைய நாளே தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 13 ஐ நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் கடிதத்தில் கைச்சாத்திட்டிருந்து. ஜனவரி 13 ஆம் திகதி தொள்ளாயிரம் (900) மில்லியன் டொலர் வழங்கப்படுமெனக் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நேரில் சந்தித்து உறுதிப்படுத்தியுமிருந்தார்.

இதன் பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுடில்லிக்குச் சென்றிருந்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியா எந்தவொரு அழுத்தங்களையும் வழங்கவில்லையென இலங்கைச் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அதிகாரப் பரவலாக்கம் அவசியம் என்று அமைச்சர் ஜெய்சங்கர் பேராசிரியர் பீரிஸிடம் வலியுறுத்தியதாக இந்திய வெளி விவகார அமைச்சு வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்தச் செய்திக் குறிப்பிலும் 13 பற்றிப் பேசியதாக எதுவுமே கூறப்படவில்லை. தமிழ்த்தேசியக் கட்சிகள் அனுப்பிய 13 தொடர்பான கடிதம் குறித்துப் பேசப்படவில்லை என்றும் கொழும்புத் துறை முகத்தின் மேற்கு முனையத்தை அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஆரம்பிப்பது குறித்தே இரு அமைச்சர்களும் பேசியதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.

அத்துடன் இந்தியாவிடம் இருந்து இலங்கை மின்சாரத்தைப் பெறுவது குறித்தும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் புதுடில்லியில் பேசியதாகவும் கூறப்படுகின்றது. ஆகவே ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையில் பிம்ஸ்டெக் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்தியா முக்கிய பங்கு வகிக்கவுள்ள நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசின் செல்வாக்கு சர்வதேச மட்டத்தில் மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டெனலாம். ஆகவே போரை நடத்திய ராஜபக்ச குடும்பம் தற்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், இலங்கை ஒற்றையாட்சியைப் பலப்படுத்தும் செயற்திட்டங்கள் அரங்கேறுவதையே தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது.

அமெரிக்கா, பிரித்தானிய, இந்தியா போன்ற வல்லாதிக்க நாடுகள் இலங்கை ஒற்றையாட்சி அரசை மேலும் பாதுகாக்கும் உத்திகளை வகுத்துச் செயற்பட்டு வரும் ஒரு பின்னணியில், வெளிச் சக்திகளோடு சில உள்ளூர் தேசிய சக்திகள் இணைந்து தனது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

நேற்றுப் புதன்கிழமை அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் முதலாவது மாநாட்டில் உரையாற்றியபோது இவ்வாறு கருத்து வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ச, 2015 இல் மகிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்தது போன்ற சதிப் புரட்சி ஒன்று இடம்பெறுவதாகவும் அடித்துக் கூறினார்.

சர்வதேச சக்திகளென கோட்டாபய ராஜபக்ச யாரைக் குறிப்பிடுகின்றார் என்று பலருக்கும் புரிந்திருக்கும். ஆனால் அதே வெளியகச் சக்திகள், ஆட்சி மாற்றம் என்ற பெயரில், தமது புவிசார் நலன்களில் மாத்திரமே கவனம் செலுத்துகின்றன. ஈழத்தமிழர்களின் பக்கம் இருக்கும் அரசியல் நியாயங்களை அந்த வெளிச் சக்திகள் ஒற்றையாட்சிக்குள் முடக்கவே முற்படுகின்றனர்.

தமது மக்கள் செல்வாக்கை மீண்டுமொரு முறை உலகத்துக்கு வெளிப்படுத்தும் நோக்கில் நேற்று நடத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி மாநாடு, மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய அரசியல் யாப்புக்கான அங்கீகாரத்தைப் பெறுவதாகவும் அமைந்திருக்கின்றது.

ஆகவே இலங்கைக்கு மார்ச் மாதம் என்பது மிக முக்கியமான மாற்றுத் தளம் ஒன்றை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதெனலாம். ஒன்று பிம்ஸ்டெக் மாநாடு, இரண்டாவது, ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு, மூன்றாவது புதிய அரசியல் யாப்பு. இவற்றில் மூன்றாவது விவகாரம் இலங்கைக்குக் கொஞ்சம் எச்சரிக்கையானதாக அமையலாம்.

அதாவது ஜெனீவா மனித உரிமைச் சபையில் இம்முறை ஆணையாளரின் எழுத்து மூல அறிக்கை காரசாரமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அதனையும் இலங்கை மிக நுட்பமாகக் கையாளக்கூடிய அளவுக்குத் தற்போதைய புவிசார் அரசியல் சூழல் அமைவைக் காணமுடிகின்றது.

ஆகவே காலத்துக்குக் காலம் புவிசார் அரசியல் போட்டிகளை உற்று நோக்கிச் சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயற்படுத்தும் தயார்ப்படுத்தல் அளவுக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் இல்லையென்பதே கண்கூடு. பிம்ஸ்டெக் மாநாட்டின் மூலம் இந்தியா அரசு இலங்கையை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குரிய பின்னணி உருவாகியுள்ளது.

அதாவது இந்து சமுத்திரத்தில், கடல் வியூகத்தைப் பொறுத்தவரை, அமெரிக்க-இந்திய மற்றும் குவாட் அமைப்பின் செயல்திறன் தற்போதைய நிலையில் பலம் பெற்றிருக்கின்றது. ஆனாலும் தென்னிந்தியக் கடல் எல்லையில் இருக்கும் இலங்கைத் தீவின் ஒற்றையாட்சி அரசும் அதன் தற்போதைய ராஜபக்ச அரசாங்கமுமே சீனாவுக்கு இருக்கும் ஒரே ஒரு பலமான தளமாகும்.

பொருளாதார ரீதியில் சீனாவுக்கு இலங்கையுடன் இருக்கும் உறவு சீன இராணுவ வியூகத்துக்குள்ளும் வரக்கூடிய ஏதுநிலை தென்படுகின்றது. இந்தக் காரணமே இலங்கையை நோக்கிய அமெரிக்க இந்திய அரசுகளின் சமீபகால கடும் பிடியாகவும் உள்ளது. செப்டம்பர் மாத ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு அதன் தாக்கத்தை மேலும் வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு.

இதன் பின்னணியிலேயே பிம்ஸ்டெக் மாநாட்டின் மூலமும் இலங்கையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூடிய உத்தியை இந்திய வகுக்க முனைகின்றது. பீரிஸ் புதுடில்லிக்குச் சென்றிருந்ததன் நோக்கமும் அதன் வெளிப்பாடே.

பிம்ஸ்டெக் பற்றிய பின் இணைப்பு

பங்களாதேஷ், பூட்டான்,இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் ஏழு நாடுகளை பிம்ஸ்டெக் உள்ளடக்கியுள்ளது.

வங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிடையில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இந்த பிம்ஸ்டெக் அமைப்பின் நோக்கமாகும். பிம்ஸ்டெக் முக்கிய 14 துறைகளை உட்படுத்திய வகையில் நடைபெற்றதோடு தற்போது அது ஏழு துறைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான தொழினுட்பம் மற்றும் புத்தாக்கத்துறைக்கு இலங்கை தலைமை வகிக்கிறது. பங்களாதேஷ் வியாபாரம் மற்றும் முதலீட்டுத் துறைக்கும், பூட்டான் சுற்றாடல் மற்றும் காலநிலை சீர்கேடு துறைக்கும், மியன்மார் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறைக்கும், இந்தியா பாதுகாப்புத் துறைக்கும்,நேபாளம் தனிநபர் தொடர்பு மற்றும் தாய்லாந்து தொடர்பாடல் துறைக்கும் தலைமை வகிக்கிறது.

மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US