ஹட்டனில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து! ஒருவர் பலி என தகவல்.. பலர் கவலைக்கிடம்
புதிய இணைப்பு
ஹட்டன் - டிக்கோயா வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படுகாயமடைந்தவர்களுள் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியில் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தானது இன்று (29.4.2026) பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பலர் காயம்
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கவலைகிடமான நிலையில் உள்ள இரண்டு நபர்கள் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பேருந்து, எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு இடமளிக்க முற்பட்ட போதே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்துள்ளதுடன் இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரும் அடங்குவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்- மலைவாஞ்சன்








