மன்னார் மாவட்டத்தில் பண்டிகை கால வியாபார நடவடிக்கை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மன்னாரில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கடை தொகுதிகளுடன், கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நகரசபையில் சுகாதார துறையினர், பொலிஸார் மற்றும் மன்னார் நகரசபையின் தலைவர், உப தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நேற்று காலை கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, வியாபார நடவடிக்கைகளுக்கு வருகின்ற வெளிமாவட்ட வியாபாரிகள் அனைவரும் கோவிட் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன், தடுப்பூசி அட்டையை வைத்திருத்தல் கட்டாயமாகும்.
குறித்த வியாபாரிகளுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறித்த தீர்மானங்களையும், சுகாதார நடைமுறைகளையும் கடைபிடிக்காத வர்த்தகர்களுக்கு எதிராக உடனடியாக பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்களின் அதிகமாக நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே மன்னார் நகர முதல்வர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2 வருடங்களாக கோவிட் தொற்று காரணமாக மன்னார் நகரசபையினால் மன்னாரில் பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பஜார் பகுதி உள்ளடங்கலாக மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு வர்த்தக நிலையங்களிலும் அதி கூடிய மக்களே கூடி நின்றமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதனால் கோவிட் தொற்று அதிகரிக்கும் சந்தர்ப்பம் இருந்தது.
குறித்த விடயங்களை அவதானித்த நிலையில் இவ்வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கடைத் தொகுதிகளை வழங்குவதன் ஊடாக மக்களின் நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.