மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க நரேந்திர மோடி விரும்பவில்லை: ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் இரண்டே நாட்களில் மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க முடியும், ஆனால் அவர் அதை விரும்பவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கும் விதமாக பன்ஸ்வாரா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று (09.08.2023) இடம்பெற்றது.
குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மணிப்பூர் விவகாரத்தை குறிப்பிட்டு பா.ஜ.க. அரசை கடுமையாக சாடியிருந்தார்.
எரியும் தீயை அணைக்க மோடி விரும்பவில்லை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பா.ஜ.க.வின் சித்தாந்தம் மணிப்பூரை கொளுத்தி விட்டது. அந்த தீ 3 மாதங்களுக்கும் மேலாக எரிகிறது.
மக்கள் கொல்லப்படுகிறார்கள், குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.
மணிப்பூரில் எரியும் தீயை அணைக்க பிரதமர் விரும்பினால் இந்திய இராணுவத்தின் மூலம் 2 அல்லது 3 நாட்களில் அதை செய்துவிட முடியும். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. மாறாக தீயை எரிய வைக்க விரும்புகிறார்.
மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு நானும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் சென்றோம். ஆனால் வன்முறை வெடித்ததில் இருந்து பிரதமர் அந்த மாநிலத்திற்கு செல்லவில்லை.
உரிமைகளையும் நிலத்தையும் ஆக்கிரமிப்பு
நாட்டின் நிலம் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது. அவர்கள்தான் அதன் அசல் உரிமையாளர்கள்.பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.-ம் அவர்கள் காட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
உங்கள் பிள்ளைகள் என்ஜினீயர்களாகவோ, வைத்தியர்களாகவே, தொழிலதிபர்களாகவோ ஆகக்கூடாது என்பது அவர்களின் எண்ணம். உங்கள் உரிமைகளையும் நிலத்தையும் பறிக்க விரும்புகிறார்கள்.
ஆனால் பழங்குடியின மக்களின் உரிமைகளை பெறவும் அவர்களின் கனவுகள் நிறைவேறும் காங்கிரஸ் விரும்புகிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |