மண்டைதீவு புதைகுழி வழக்கு : பொலிஸாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16.12.2025) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து நாளைய தினம் சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி இன்றையதினம் (16) நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக திகதியிடப்பட்டிருந்தது.
இதற்கமைய, குறித்த வழக்கு இன்று (16) ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிபதி சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்ட ரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை
இதன்போது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த வழக்கு தொடர்பாக அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் படையினரிடம் பெற்ற சாட்சிகள் மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட கிணறு தொடர்பாக கிடைக்கப்பெற்ற சான்றுகள் உள்ளிட்டவற்றின் அறிக்கையை எழுத்து மூலமாக நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

மேலும், கையால் எழுதிய அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி சமர்ப்பித்து, விளக்கத்தை நீதிபதிக்கு சமர்ப்பணம் செய்த நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சில் பிரதியாக்கம் செய்து நாளையதினம் (17.12.2025) மீண்டும் அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்பதாக மண்டைதீவு புதைகுழியுடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுவதுடன், பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதாவது, கடந்த செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் இருவேறு முறைப்பாடுகளாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அந்தக் கிணறுகளைச் சட்ட ரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அறிக்கையை சமர்ப்பிக்குமாறு
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 புதன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, ஊர்காவற்துறை பொலிஸாரினால் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்து.
இதனையடுத்து இவ்வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டதுடன் மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இருப்பினும், பல வருடங்கள் கடந்த விடயம் என்பதால் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியிருந்த நிலையில் வழக்கு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு டிசம்பர் 16ஆம் திகதியான இன்று மன்றில் விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நாளை தட்டச்சு செய்யப்பட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |