யாழ்.மண்டைதீவுக் காணிகள் சுவீகரிப்பு: வெடிக்கவுள்ள போராட்டம் (Photos)
யாழ்ப்பாணம் -மண்டைதீவுக் காணிகளைக் கடற்படைக்குச் சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் போராட்டமானது எதிர்வரும் புதன்கிழமையன்று (12.07.2023) காலை.7.30 மணியளவில் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
யாழ்.வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் (J/07) உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலுசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காகச் சுவீகரிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்ப்புப் போராட்டம்
அதனடிப்படையில், குறித்த காணி அளவீட்டுப் பணிகளை எதிர்வரும் 2023.07.12 ஆம் திகதி ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் (12.07.2023) இடம்பெறும் காணி அளவீட்டுப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அனைவரும் இணைந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
நடைபெறவுள்ள போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

