வழிப்பறி முயற்சியைத் தடுக்க முற்பட்ட போது குத்திக் கொல்லப்பட்ட இளைஞர்
கம்பஹா மாவட்டத்தின் பஹலகம பகுதியில் 29 வயது இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (20.09.2022) இரவு பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் அரச வங்கியில் மத்திய நிலை ஊழியராக பணிபுரியும் ரஷிக வினோத் (29 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
கைப்பைகளை பறிக்க முயற்சி
வீட்டிற்கு அருகில் வைத்து ரஷிகவின் மனைவி மற்றும் அவரின் நண்பியின் கைப்பைகளை, மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் பறிக்க முயற்சித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த விடயத்தை அவதானித்து ரஷிகவும், அவரது தந்தையும் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை தாக்கியுள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
அப்போது ஏற்பட்ட கைகலப்பில் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களில் ஒருவர் ரஷிகவை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த ரஷிக உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதவான் விசாரணை
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்னவினால் புதன்கிழமை (21.09.2022) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் ரஷிகவை கூரிய ஆயுதத்தால் தாக்கிய பின்னர், கைப்பைகளையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.