தண்டப்பணம் செலுத்த முடியாத நபர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத ஆண் ஒருவர் வாழைச்சேனை நாசிவன்தீவு ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம், நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
முறக்கொட்டாஞ்சேனை - சேமன் வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய சின்னத்தம்பி செல்வராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
பிணையில் செல்ல அனுமதி
உயிரிழந்தவர், கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்திவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்து நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கூறி பிணையில் செல்ல அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றில் தண்டப்பணம் செலத்துவதற்கு பணத்தேவை ஏற்பட்டதையடுத்து மகளிடம் 30 ஆயிரம் ரூபா பணத்தை கோரியுள்ள நிலையில் அவரிடம் பணம் இல்லாததை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடிவந்துள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நாசிவன்தீவு ஆற்றில் சடலம் ஒன்று நீரில் மூழ்கிய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் குறித்த சடலத்தை சம்பவதினமான நேற்று இரவு 10 மணிக்கு மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |