கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைத்துப்பாக்கி, மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் இரத்மலானை பகுதியில் வசிக்கும் 41 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதியன்று கல்கிஸ்ஸ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அவர் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பேலியகொட மாவட்ட குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.